31
5. கி. பி. 575 முதல் கி. பி. 900 வரை ஆட்சிபுரிந்த பாண்டியர்கள்
பாண்டியன் கடுங்கோன்
இம்மன்னன் கி. பி. 575 முதல் கி. பி. 600 வரையில் ஆட்சி புரிந்தனன் என்று தெரிகிறது. பாண்டி நாட்டைக் களப்பிரரிட மிருந்து முதலில் கைப்பற்றி மீண்டும் பாண்டியரது ஆட்சியை மதுரையில் நிலைபெறுமாறு செய்தவன் இவ்வேந்தனே யாவன். இவன் களப்பிரரைப் போரிற் புறங்கண்டு அன்னோரது ஆளுகைக்குட்பட்டிருந்த தன் நாட்டைக் கைப்பற்றி அரசு செலுத்திய வரலாற்றை வேள்விக்குடிச் செப்பேடுகள் நன்கு விளக்குகின்றன. அப்பகுதி,
‘களப்ரனென்னுங் கலியரசன் கைக்கொண்டதனை யிறக்கியபின் படுகடன் முளைத்த பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து வேலைசூழ்ந்த வியலிடத்துக்
கோவுங் குறும்பும் பாவுடன் முருக்கிச் செங்கோ லோச்சி வெண்குடை நீழற்
றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப்
பிறர்பா லுரிமை திறவிதி னீக்கித்
தன்பா லுரிமை நன்கனம் அமைத்த மானம் போர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்னர் ஒளிநக ரழித்த
கடுங்கோ னென்னுங் கதிர்வேற் றென்னன்’
என்பது. இதனையே அண்மையில் கிடைத்த பராந்தக பாண்டியனின் தளவாய்புரச் செப்பேடுகள் இரண்டிடங்களில்