உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

133

வனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டின் நடுவில் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. இலங்கை வரலாறு கூறும் மகாவம்சமும் அப்போர் கி. பி. 1017-ல் நிகழ்ந்தது என்று கூறி அச்செய்தியை வலியுறுத்துகின்றது. இராசராச சோழன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஈழ நாட்டுப் போரில் தோல்வியுற்று ஓடியொளிந்த ஐந்தாம் மகிந்தன் என்னும் சிங்கள வேந்தன், சில ஆண்டுகட்குப் பிறகு சோழர் ஆட்சிக்குட் படாமல் அத்தீவின் தென் கிழக்கில் சேய்மையிலிருந்த ரோகண நாட்டிலிருந்து பெரும்படை யொன்றைத் திரட்டிக்கொண்டு சோழர்கள் மீது போர் தொடுத்துத் தான் இழந்த நாட்டைக் கைப்பற்ற முயன்றனன். அதுபற்றியே இராசேந்திர சோழன் கி.பி. 1017-ல் ஈழ நாட்டின்மேல் மீண்டும் படையெடுத்துச் செல்வது இன்றியமையாததாயிற்று. அப்படை யெழுச்சியில் ஈழத்தில் நிகழ்ந்த போரில் இவன் வெற்றி பெற்றமையோடு சிங்கள மன்னர்கட்கு வழி வழியுரிமை யுடையதாயிருந்த சிறந்த முடியினையும் அன்னோர் தேவியரது அழகிய முடியினையும் கைப்பற்றிக்கொண்டு சோழ நாட்டிற்குத் திரும்பினான். அன்றியும், மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் இலங்கை வேந்தனிடத்து அடைக்கலமாக வைத்துச் சென்ற பாண்டியர் முடியையும் அன்னோர்க்குரிய இந்திரன் ஆரத்தையும் இவன் கைப்பற்றிக்கொண்டமை ஈண்டுக் குறிப்பிடத்தக்க தொன்றாம். முதற் பராந்தக சோழன் தன் ஆட்சிக்காலத்தில் ஈழ நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றமைக்குக் காரணம் மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் அங்கு வைத்துச் சென்ற 'சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்' கைப்பற்றுவதற்கேயாம். ஆனால், அவன் விரும்பியவாறு அக்காலத்தில் அவற்றைக் கைப்பற்றிக் கொண்டுவர முடியவில்லை. எனினும், அவன் பேரனுக்குப் பேரனாகிய நம் இராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது அறியற்பாலதாம்.

1. தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே' என வரும் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவைப் பாடற் பகுதியாலும், “இந்திரன் முனிந்து இட்டபூணாகிய ஆரமும்........... தென்னர்கோன் மார்பிடத்தன” என்னும் அடியார்க்கு நல்லாருரையாலும் பாண்டியர்கள் வழிவழியணிந்து வந்த இந்திரன் ஆரத்தின் வரலாறு குறிக்கப்படுதல் காண்க. இவ்வரலாற்றின் விரிவைத் திருவிளையாடற் புராணத்தாலுணரலாம்.