உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

143

அதிலிருந்த ஓர் உள்நாட்டிற்குத் தண்டபுத்தி மண்டலம் என்ற பெயர் வழங்கியது என்றும் தெரிகின்றன.

தக்கணலாடம், என்பது வங்காளத்திலுள்ள ஹூக்ளி (Hooghly), ஹௌரா (Howrah) ஜில்லாக்களைக் கொண்ட நாடு; உத்தரலாடம் என்பது மூர்ஷிதாபாத் (Murshidabad), பீர்பூம் (Birbhum) ஜில்லாக்களைத் தன்னகத்துக் கொண்ட நாடாகும்.' தண்டபுத்தி மண்டலத்திற்குக் கிழக்கே தக்கணலாடமும் அம்மண்டலத்திற்கு வடக்கிலும் வடகிழக்கிலும் உத்தர லாடமும் இருந்தன என்பது உணரற்பாலது.

வங்காள தேசம் என்பது கீழ் வங்காளமாகும். தண்ட புத்தியை யாண்ட தன்மபாலனும் தக்கணலாடத்தை யாண்ட இரணசூரனும் வங்காள வேந்தனாகிய கோவிந்த சந்தனும் உத்ரலாடத்திலிருந்து அந்நாளில் அரசாண்ட பேரரசனாகிய மகிபாலனுக்குட்பட்ட குறுநில மன்னர்களாயிருத்தல் வேண்டும் என்பது இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தியினால் உய்த்துணரக் கிடக்கின்றது. அவர்களுள், மகிபாலனைத் தவிர மற்றையோர் செய்திகள் தெரியவில்லை. தன்மபாலன் என்பவன், ஒருகால் மகிபாலனுக்கு உறவினனாக இருப்பினும் இருக்கலாம்.

சோணாட்டுப் படைத் தலைவன்பால் தோல்வியுற்ற வட வேந்தர்களை நிரல்படக் கூறுவதில், இராசேந்திரன் மெய்க் கீர்த்திக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகளுக்கும் சிறிது வேறுபாடு காணப்படுகிறது. மெய்க்கீர்த்தி, அப்போர் நிகழ்ச்சிகள் முடிவெய்தியவுடன் எழுதப்பெற்றது. திருவாலங் காட்டுச் செப்பேடுகள், சில ஆண்டுகளுக்குப் பின்னர் வரையப் பெற்றவை. ஆதலால், மெய்க்கீர்த்தியில் உள்ளவையே நேர்மையானவை என்று கொள்வது மிகப் பொருந்தும். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் கூறப்பெற்ற வரலாற்றை அப்படியே ஏற்றுக் கொண்டால் உத்தரலாட வேந்தனாகிய மகிபாலனை அப்படைத் தலைவன் வென்றது, கங்கைகொண்டு திரும்புங்கால் நிகழ்ந்த நிகழ்ச்சி என்று கொள்ளல் வேண்டும்.

1. Ep. Ind., Vol. XXII, No. 25. (Irada Copper plate of the Kamboja King Nayapaladeva)

2. Ep. Ind., Vol. XXVII, p. 24.