உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3


தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

ஜகதீபாலன் வரலாறு காணப்படவில்லை; மற்றொரு வரலாறு சொல்லப்படுகின்றது. அது கன்னியாகுப்ஜத்தை யாண்ட வீரசலாமேகன் என்பவன் தன் நாட்டைவிட்டு ஈழம் புகுந்து, அதனை ஆண்டுவந்தபோது இராசாதிராசன்பால் தோல்வியுற்று, தன் தாய், தமக்கை, மனைவி முதலானவர்களை விட்டுவிட்டுப் புறங்காட்டியோடினன் என்பதே. அவ்வீரசலாமேகன், பகைஞ ராகிய சோழரால் தன் குடும்பத்தார் பல அவமானங்கட்கு உட்படுத்தப்பட்டமை யுணர்ந்து, அதனைப்பொறாமல் மீண்டும் போர் புரிந்து உயிர்துறக்கவே, அவன் பொன்முடி கைப்பற்றப் பட்டது என்றும் இராசாதிராசன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. ஒருகால், மகாவம்சம் கூறும் ஜகதீபாலனும் இராசாதிராசன் மெய்க்கீர்த்தி யுணர்த்தும் வீரசலாமேகனும் ஒருவனாகவே இருத்தல் கூடும். ஆனால், முன்னவன் அயோத்தி யரசகுமாரன் என்று மகாவம்சத்திலும் பின்னவன் கன்னியாகுப்ஜ வேந்தனென்று மெய்க்கீர்த்தியிலும் சொல்லப் பட்டிருப்பது அக்கொள்கைக்கு ஒரு தடையாக உளது. அன்றியும் இருவர் காலங்களும் முரண் படுகின்றன. ஆகவே, பிற ஆதாரங்கள் கிடைக்கும் வரையில் அதனை ஒரு தலையாகத் துணிதற்கிடமில்லை.

இனி, கன்னரன் வழிவந்த ஈழத்தரசனாகிய சீவல்லபன் மதனராசன் என்பவன், இராசாதிராசனால் கி. பி. 1046-ல் தோற்கடிக்கப்பட்டான் என்பது இவன் கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. மகாவம்சத்தில் அவன் பெயரே காணப்பட வில்லை. ஆனால், விக்கம பண்டுவின் புதல்வன் பராக்கிரமபண்டு என்னும் ஈழமன்னன் ஒருவன் சோழரோடு புரிந்த போரில் கி. பி. 1053-ல் இறந்தான் என்று மகாவம்சம் கூறுகின்றது. சீவல்லப மதனராசனும் பராக்கிரமபண்டு என்பவனும் ஒருவனாகவே இருக்கலாம் என்று கொள்வதற்கு அவ்விருவரும் சோழரோடு போர்புரிந்து இறந்த ஆண்டுகள் முரண்படுகின்றன. ஆகவே, அதுபற்றி இப்போது ஒன்றும் கூற இயலவில்லை. சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களையும் மகாவம்சத்தையும் ஒப்பு நோக்கியாராயுங்கால், அக்காலப் பகுதியில் ஈழ மண்டலத்தில் பெரும்பகுதி, சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதும் அதன் தென் கிழக்குப் பகுதியிலிருந்த ஒரு சிறு நாடாகிய ரோகணம்