உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




210

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

அவனை வீரராசேந்திரன்பால் அனுப்பினான். அதனைப் பெற்றுச் செய்தியுணர்ந்த இவ்வேந்தன், 'சிந்தையும் முகமுந் திருப்புய மிரண்டும் -ஏந்தெழில் உவகையோடு இருமடங்கு பொலிய'ஐந்தாம் முறை ஆகவமல்லனோடு போர் புரிவதற்கு அவன் விரும்பியவாறு பெரும் படையுடன் கூடல் சங்கமத்திற்குச் சென்று, அதற்கணித்தாகவுள்ள கரந்தை என்னும் இடத்தில் அவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அத்திரு முகத்தில் குறிக்கப் பெற்ற நாளுக்குப் பிறகு ஒரு திங்கள் வரையில் இம் மன்னன் அங்குக் காத்துக் கொண்டிருந்தும், அவன் முன்னர்த் தெரிவித்தவாறு வரவில்லை. அதுபற்றி இவன் பெருஞ்சினங் கொண்டு, இரட்டபாடி நாட்டில் அப்பகுதியி லிருந்த தேவநாதன், சித்தி, கேசி என்னுஞ் சளுக்கியத் தலைவர் மூவரும் தோற்றுத் தனித்தனியாக முதுகுகாட்டி யோடும்படி போர்புரிந்து, பல இடங்களில் எரியூட்டித் துங்கபத்திரைக் கரையில் நானிலம் புகழ ஒரு வெற்றித் தூணும் நிறுவினான். அன்றியும், இவ்வேந்தன் ஆகவமல்லனைப்போல் ஓர் உருவம் அமைத்துக் கழுத்திற் கண்டிகை பூட்டி, அவனும் அவன் மக்களும் தனக்கஞ்சி உலகறிய ஐந்துமுறை முதுகுகாட்டி ஓடிய செய்தியை ஒரு பலகையில் எழுதுவித்து, அதனை அதன் மார்பில் தொங்கவிட்டு மற்றுஞ் சில அவமானங்களும் செய்வித்தனன். பிறகு, 'அவன் கைப்பற்றியிருந்த வேங்கி நாட்டை மீட்காமல் திரும்பு வதில்லை; வல்லவனாகில் வந்துகாக்க' என்று சொல்லியனுப்பி விட்டு, இவன் வேங்கி நாட்டை நோக்கிச் சென்றான்.'

இனி, ஆகவமல்லன் தானே தெரிவித்தவாறு குறித்த நாளில் கூடல் சங்கமத்தில் வீரராசேந்திரனோடு போர் புரிய வாராமைக்குக் காரணம் தெளிவாகப் புலப்படவில்லை. வீரராசேந்திரன் கல்வெட்டுக்கள், அவன் அச்சமுற்று மேல்கடற்பக்கம் ஓடி ஒளிந்தான் என்று உணர்த்துகின்றன. ஆனால், அவன் திடீரென்று சுரநோயுற்று பல மருத்துவங்கள் செய்தும் பயன்படாமையின், துன்பம் பொறுக்கமுடியாமல் துங்கபத்திரை யாற்றிற்குப்போய் குருவர்த்தி என்னுமிடத்தில் கி. பி. 1068-ஆம் ஆண்டு மார்ச்சுத்திங்கள் 30-ஆம் நாளில் நீரில் மூழ்கி உயிர் துறந்தான்

1. S. I. I., Vol. III, No. 30.