உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

3. சோழன் விசயாலயன்

கி.பி 846

-

- 881

சோழர் பேரரசை நிறுவ முதலில் அடிகோலியவன் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் எழுந்த விசயாலயன் என்னும் சோழ மன்னனே யாவன். இவன் தஞ்சை மாநகரைக் கைப்பற்றி அதனைத் தன் தலைநகராக வைத்துக் கொண்டனன் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உணர்த்துகின்றன. நகரத்திற்கு இன்றியமையாத எல்லா நலங்களுடன் தஞ்சாபுரி என்னும் மாநகரை விசயாலய சோழன் புதிதாக அமைத்தான் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டு கூறுகின்றது. விசயாலயன் காலத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தஞ்சை மாநகர் சிறப்புடன் இருத்தது என்பது கி. பி. எட்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பெற்ற செந்தலைக் கல்வெட்டுக்களால் புலனா கின்றது. ஆகவே தஞ்சாவூரை விசயாலயன் புதிதாக அமைத்தான் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டு உரைப்பது பொருத்தமில் கூற்றேயாம். எனவே, இவ்வேந்தன் அதனைப் பிறரிடமிருந்து கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுவது வலியுறுதல் காண்க.

4

இனி, விசயாலயன் என்பான் யாவன்? இவனுக்கும் பண்டைச் சோழமன்னர்க்குமுள்ள தொடர்பு யாது? இவன் தஞ்சாவூரை யாரிடமிருந்து எப்போது கைப்பற்றிக் கொண்டனன் என்பவற்றை ஈண்டு ஆராய்வாம்.

1. S. I. I., Vol. III, No. 205.

2. Epigraphia Indica Vol. XVIII No. 4.

3. Ibid. Vol XIII pp. 122 and 244.

4. திருக்கோவலூர்த் தாலுகா வீரசோழபுரத்தில் வீரக்கல் ஒன்றில் வரையப் பெற்றுள்ள 'தஞ்சைகொண்ட கோப்பர கேசரிவர்மற்கு' என்று தொடங்கும் கல்வெட்டு இவ்வுண்மையை விளக்குதல் அறியத்தக்கது.

Annual Report on South Indian Epigraphy for 1936, Part II, Para 34.