உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

63

இனி, அரிஞ்சயனது கல்வெட்டுக்கள் சோழ நாட்டில் யாண்டும் காணப்படாமையால் இவன் முடி சூடிய சில திங்கள்களில் இறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆராய்ச்சியாளருள் சிலர் இவன் மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்திருத்தல் கூடும் என்று கருதுகின்றனர்.1 இளவரசுப் பட்டம் பெற்ற நாள் முதல் ஆட்சி யாண்டு கணக்கிடப்படுவது அக்காலத்து வழக்கமாதலின் அங்ஙனம் கருதுவதற்கு இடமில்லை என்க.

இவனுக்கு வீமன் குந்தவை, ஆதித்தன் கோதைப்பிராட்டி, கல்யாணி, பூதி ஆதித்தப் பிடாரி என்ற நான்கு மனைவியர் இருந்தனர். அவர்களுள், வீமன் குந்தவை என்பவள் கீழைச் சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் வீமன் புதல்வியாவள். இவள் திருப்பழனப் பக்கத்திலிருந்த அரையன் ஆதித்த வீமன் மகளாயும் இருத்தல் கூடும் என்று கருதப்படுகிறது. குந்தவை என்ற பெயருடன் சோழ நாட்டில் முதலில் காணப்படும் அரசி இவ்வம்மையாகவே இருத்தலாலும், இப்பெயர் ஆந்திர நாட்டில் வழங்கும் பெயராயிருத்தலாலும், சோழர்கள் தம் பகைவர்களைப் புறங்காண வேண்டிப் புறநாட்டு வேந்தருள் சிலரை அந்நாட்களில் தமக்கு உறவினராக்கிக் கொண்டு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருத்தலாலும் அரிஞ்சயன் மனைவியாகிய இம்மாதேவி கீழைச் சளுக்கிய மன்னன் மகளாகவே இருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். மற்றொரு மனைவியாகிய ஆதித்தன் கோதைப் பிராட்டி என்பவள் ஒரு சேரமன்னன் மகளாதல் வேண்டும். பிறிதொரு மனைவியாகிய கல்யாணி என்பாள் வைதும்பராயன் மகள் என்பது அன்பிற் செப்பேடுகளால் அறியப்படுகிறது. வேறொரு மனைவியாகிய பூதி ஆதித்த பிடாரி என்பவள், கொடும்பாளூர்க் குறுநில மன்னன் பூதி விக்கிரம கேசரியாகிய தன்னவன் இளங்கோவேள் மகள் ஆவள்'. இவ்வரசி,

1. Historical Sketches of Ancient Dekhan. 242.

2. S. I. I., Vol. XIII, No. 225.

3. The Cholas, இரண்டாம் பதிப்பு, பக்கம் 152.

4. Ep. Ind., Vol. XV, No. 5, Verse 24.

5. S. I. I., Vol. III, No. 96.