உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 6

நச்சினார்க்கினியர் முதலான உரையாசிரியர்களின் உரை களிலும் காணப்படும் குறிப்புக்களும், சில தமிழ் நூல்களின் காலங்களை உணர்தற்குத் துணை புரிந்தன. தமிழ்நாட்டில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுமுதல்தான் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளமையால் அந் நூற்றாண்டிற்கு முற்பட்டுள்ள இருண்டகாலப் பகுதியில் நிலவிய நூலாசிரியர்களின் காலங்களை ஆராய்ந்து காண்பதற்கு அவை பயன் படவில்லை. ஆயினும், கிடைத்த அகச்சான்றுகளையும் புறச்சான்றுகளையும் உறுதுணையாகக் கொண்டு இவ்விலக்கிய வரலாறு எழுதி முடிக்கப்பட்டது.

இந்நூலில் கடைச் சங்கத்தின் இறுதிக் காலமும், சங்கம் அழிந்தமைக்குக் காரணமும், அக்காலத்தில் தமிழ் நாட்டில் நடை பெற்ற அன்னியர்களின் ஆட்சியில் ஏற்பட்ட பல பல மாறுதல்களும், அப்போது அருகித் தோன்றிய சில தமிழ் நூல்களும், அவை தோன்றியமைக்குரிய ஏதுக்களும், அந் நூல்களின் வரலாறுகளும் இயன்றவரையில் விளக்கப் பட்டுள்ளன.

இத்தகைய வரலாற்று நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடுகள் நிகழ்வதும் எதிர்காலத்தில் கிடைக்கும் ஆதாரங்களால் காலக் குறிப்புக்களுள் சில மாறுபடுவதும் இயல்பேயாம் என்பது அறிஞர்கள் உணர்ந்ததே.

இந் நூலை எழுதுவதற்கு வாய்ப்பளித்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார்க்கும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் A.சிதம்பரநாதச் செட்டியார் M.A., Ph.D. அவர்கட்கும் என்றும் நன்றியுடையேன். இஃது அச்சாகும்போது 'புரூப்'திருத்தியுதவிய ஆராய்ச்சித்துறை விரிவுரையாளர் வித்வான் திரு. க. வெள்ளை வாரணர் அவர்களையும் இதுபோன்ற நூல்களை வெளி யிடுவதில் பேரார்வங்காட்டிச் செயலாற்றிக் கொண்டிருக்கும் பல்கலைக் கழக வெளியீடு அலுவலாளர் திரு. J. M. சோமசுந்தரம் பிள்ளை B. A., B. L. அவர்களையும் எஞ்ஞான்றும் மறவேன்.

அண்ணமாலை நகர் 47-55

இங்ஙனம்,

T. V. சதாசிவ பண்டாரத்தார்