உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 6.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் இலக்கிய வரலாறு

27

தமிழ் மக்கள் தம் நாட்டில் வந்து தங்கும் அயல் நாட்டாரோடு அன்புடன் கலந்து பழகும் இயல்பினர் என்பது யாவரும் அறிந்ததொன்று. கடைச்சங்க காலத்தில் யவனர், வடவாரியர், கடார நாட்டினர், அருமண தேயத்தார், சோனகர் முதலானோர் தமிழகத்திற்கு அடிக்கடி வந்து தங்கியிருந்த செய்தி, சங்கத்துச் சான்றோர் பாடல்களாலும் உரையாசிரியர் களின் குறிப்புக்களாலும் அயல்நாட்டாருடைய யாத்திரைக் குறிப்புக்களாலும் நன்கறியக் கிடக்கின்றது. அந்நாட்களில் அவ்வயலாரோடு நெருங்கிப் பழகி வந்த தமிழ் மக்களுள் சிலர் தம் நாகரிக நிலையினின்று மாறி ஒழுக்கங்களிலும் தவறுவார் ஆயினர்; எனவே, அவ்வயலாருடைய தீய இயல்புகளையும் தீயொழுக்கங்களையும் அன்னோர் மேற்கொள்ளத் தொடங்கியமை தெள்ளிது. அத்தகையோரைத் திருத்தி நல்வழிப் படுத்துவதும், தமிழருடைய தொன்றுதொட்டுவந்த அற வொழுக்கமும் நாகரிகமும் சிதைந்தொழியாதவாறு காப்பாற்று வதும், அக்காலத்தில் தூய வாழ்க்கை நடத்திவந்த தொல்லாணை நல்லாசிரியன்மாரின் மாபெருங் கடமையாகி விட்டமை அறியற்பாலதாம். கடைச்சங்க காலத்தில் நிலவிய பேரறிஞராகிய ஆசிரியர் திருவள்ளுவனார் அக்கடமையை நிறைவேற்றும் பொருட்டுத் திருக்குறள் என்ற சிறந்த நீதிநூலொன்று இயற்றி, அதன் மூலமாகத் தமிழ்மக்கட்குப் பல அரிய உண்மைகளை அறிவுறுத்தி, அன்னோர் தம் அறவொழுக்கங்களிலும் நாகரிக நிலையிலும் தவறாதவாறு அரண் செய்வாராயினர். ஒப்பற்ற அப்பெரு நூலை அக்காலத்திலிருந்த புலவர் அரசர் முதலான எல்லோருமே நன்கு பயின்று நல்ல பயன் எய்தினர். அந்நூற் பயிற்சியின் பயனாகக் கடைச்சங்க நாளில் தமிழ்மக்களின் அறவொழுக்கங்களும் நாகரிகமும் பெரும்பாலும் குன்றாமல் நிலைபெற்றன என்று உறுதியாகக் கூறலாம். அதனையுணர்ந்த வேறு அறிஞர் சிலரும் அவ்வரிய நூலைப் பின்பற்றி மற்றுஞ் சில நீதிநூல்களை அக்காலத்தில் இயற்றியுள்ளனர். அவைகள் எல்லாம் தமிழ்மக்கள் தம் பண்டை அறவொழுக்கங்களைப் பொன்னேபோற் போற்றி அவற்றின் வழியே நல்வாழ்க்கை நடத்தி இன்புறுவதற்குப் பெரிதும் பயன்பட்டுவந்தன வெனின், அச்செய்தி வெறும் புனைந்துரை யன்று.