உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110




19. செருத்துணையாரும் புகழ்த்
துணையாரும் அவதரித்த திருப்பதிகள்

அறுபான்மும்மை நாயன்மார்களுள் செருத்துணையார் என்பவர் ஒருவர். இப்பெரியார் தஞ்சாவூரில் அவதரித்து, திருவாரூர் என்னும் திருப்பதியை அடைந்து சிவபத்தியும் அடியார் பத்தியும் மிக்குடைய வராய்த் திருத்தொண்டு செய்து வந்தனர். அந்நாளில், திருக்கோயில் வழிபாட்டிற்கு அங்கு வந்த பல்லவர் கோனாகிய கழற்சிங்கரது மனைவியார் பூமண்டபத்தின் பக்கத்திற்கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்துபார்க்க, அச்செயலைப் பொறாத செருத் துணையார் அவ்வம்மையாரின் மூக்கை அறுத்தனர். அஞ்சா நெஞ்சம் படைத்த இவ்வடிகள் ஆரூரிறைவற்கு மலர்மாலை தொடுக்கும் தொண்டினைப் பன்னாள் புரிந்து, இறுதியில் அப்பெருமானது திருவடி நிழலை யடைந்தனர். இவ்வடியாரது வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரிய புராணத்திற் காணலாம்.

இவ்வடிகள் பிறந்த திருப்பதி தஞ்சாவூர் என்பது 'தஞ்சை மன்னவனாஞ் செருத்துணை தன்னடியார்க்கு மடியேன்' என்னும் சுந்தரமூர்த்தி சுவாமிகளது திருவாக்கினால் அறியப்படுகின்றது. தஞ்சாவூர் என்ற பெயருடைய மூன்று ஊர்கள் நம் தமிழகத்தில் உள்ளன. பாண்டி மண்டலத்தில் தென்காசிக்கருகில் ஒரு தஞ்சாவூர் உளது என்பது, தென்காசிக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.[1] சோழமண்டலத்தில் அப்பெயர் வாய்ந்த இரண்டு ஊர்கள் இருக்கின்றன. எனவே, இம்மூன்றனுள் செருத்துணையாரது திருப்பதி யாது என்பது ஆராய்தற்குரியதாகும்.

நம்பியாண்டார் நம்பியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில் உள்ள ஒரு பாடலும், சேக்கிழாரடிகளது


  1. Travancore Archaeological Series Vol. I. Pages 92 & 110.