2
மேன்மாடியில் முன் வராந்தாவில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறே பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்தார் சதானந்தம் பிள்ளை. தங்கள் பங்களாவுக்குள் ஏதோ வண்டி வரும் சப்தங் கேட்டு விட்டு, யார் வருகிறது என அறிய அவர் எழுந்து முன்வந்து பார்த்தார். அவர் பார்வையில் முதலில் பட்டது வண்டியிலிருந்து அப்போது தான் இறங்கி நின்ற மங்கையர்க்கரசி தான். முன்பின் தெரியாத யாரோ ஒரு இளம் பெண்ணைக் கண்டதும் அவர் வியப்புற்று மீண்டும் பார்க்கலானார். அதே சமயத்தில் மங்கையர்கரசியும் தற்செயலாக மேலே நோக்க இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டன. மங்கையர்க்கரசி நாணத்தால் உடனே தலையைத் தாழ்த்திக்கொண்டாள். அவரும் ஒரு பெண்ணை - அறிமுகமில்லாத ஒரு மங்கையை நோக்குவது சரியல்ல என்ற எண்ணத்தோடு தம் பார்வையைத் திருப்பிக் கொண்டார். ஆனால், அவர் கண் வாயிலாக நெஞ்சத்தில் பதிவாகிய அவள் உருவம் சோக சித்திரமாக அவருடைய மனக்கண் முன் பிரதிபலித்தது. ஒரு கணத்தில் அவருடைய நெஞ்சத்தை நெகிழ்ந்து உருகச் செய்துவிட்ட அவ்வுருவத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டுமென்று அவருடைய மனதில் ஆவல் எழுந்தது. தாம் உட்கார்ந்திருந்த இடத்துக்குத் திரும்பிய அவர் மீண்டும் நடந்து மெல்லத் தலையை நீட்டிப் பார்க்கலானார். அச்சமயம் தம் மனைவியான திலகவதி அவர்களை வரவேற்று உபசரித்தவாறு உள்ளே அழைத்துச் செல்வதைக் கண்டு, 'அட! குமரியும் கிழவியுமாகவல்லவா வந்திருக்கிறார்கள். யார் இவர்கள்? எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? இப்படி யாரும் வருவார்கள் என்று அவள் சொல்லவில்லையே!' என்று அவர் பலவிதமாக எண்ணினார்.
அவர் மங்கையர்க்கரசியை இரண்டாவது முறை பார்த்ததானது நிழலுருவத்தின் (போட்டோ ) மீது ஓவியனொருவன் வண்ணந் தீட்டி நன்றாக விளங்கச் செய்தது
து.-2