இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதாவின் தேன்மழை
14
ஆதிநீ ரான முந்நீர்
அச்சத்தைக் கொடுக்கும் தண்ணீர்.
பாதிநீர் காற்றை மோதும்
பாதிநீர் கரையை மோதும்
சீதநீர்த் துளிகள் எல்லாம்
சிறியகண் ணாடி மீதில்
ஊதிடும் ஆவி போன்று
மறைந்திடும் உலர்ந்த மண்ணில்.
விண்வெளி இவ்வை யத்தின்
விரிகுடை; புவியில் வாழும்
பெண்களின் கண்கள் இட்ட
பிச்சையே கடலின் நீலம்
பண்கடல் உண்டே யன்றிப்
பாற்கடல் இருந்த தில்லை.
உண்டெனில் கதையி லன்றி
உலகினில் காட்டு வார்யார்?
விரிகடல் வழங்கும் முத்தே
மேகமும் வழங்கும் முத்தே
திரைநுரை நீரின் நோயே
சிறுநிலாத் தழும்பும் நோயே
கருங்கடல் உடலும் உப்பே
காதலர் உறவும் உப்பே
விரிந்தநீர் நெய்தல் நீரே
விரிகடல் பெயர்முந் நீரே!