இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
தலைமை தாங்கும் தமிழ்
படுத்திருக்கும் வினாக்குறிபோல் மீசை வைத்த
- பாண்டியர்கள் வளர்த்தமொழி, கடலின் நீரை
உடுத்திருக்கும் உலகத்தில் தலைமை தாங்கும்
- உயர்ந்தமொழி; வெளிநாட்டார் மொழிக்குச் சொற்கள்
கொடுத்திருக்கும் வள்ளல்மொழி; வன்மை மென்மை
- கொண்டமொழி : குமரிமொழி ; காப்பி யங்கள்
வடித்திருக்கும் ஆதிமொழி அறிவில் மூத்த
- வள்ளுவனை ஈன்றமொழி தமிழே யாகும்.
தேன்பிறந்த பின்மலர்கள் பிறப்ப தில்லை
- திசைபிறந்த பின்வானம் பிறப்ப தில்லை
மீன்பிறந்த பின்குளங்கள் பிறப்ப தில்லை
- வேல்பிறந்த பின்இரும்பு பிறப்ப தில்லை
தேன்சுரக்கும் தமிழ்பிறக்கு முன்பே மற்ற
- தேசத்தார் பேசுமொழி பிறக்க வில்லை
வான்பிறக்கும் முன்காற்றுப் பிறந்த துண்டோ?
வையத்தில் தமிழ்போலும் சிறந்த துண்டோ?