7. திருக்கடிகை அக்காரக்கனி
இறைவன் தன் ஞானசக்தியினால் எங்கும் பரவி எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கி நிற்கின்றான். அந்த ஞான சக்தியினாலேயே எல்லாப்பொருள்களுள்ளும் நிறைந்து விளங்கு கின்றான். வைணவ சமயத்தில் இறைவனின் இவ்விருதன்மைகளும் ‘வியாபகத்துவம்’, ‘அந்தர்யாமித்துவம்’ என்று வழங்கப் பெறும். இவ்விரண்டுமே திருமந்திரத்தின் ‘நாராயண’ என்ற சொல்லின் சிறப்புப் பொருள்களாகும். நம்மாழ்வாரின்,
“அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற் கும்பிரான்”[1]
என்ற திருவாய்மொழிப் பாசுரப்பகுதி இதனை நன்கு விளக்குகின்றது. ‘தன்னுள் அனைத்துலகும் நிற்க’ என்றது வியாபகத் தன்மையை. தானும் அவற்றுள் நிற்கும் பிரான்’ என்பது அந்தர்யாமியாம் நிலைமையை. இங்ஙனம் அந்தர்யாமியாக இருக்கும் நிலைமையைக் கொண்டு அவனே எல்லாப் பொருள்களாகவும் இருக்கின்றான் என்று கூறுவதும் உண்டு.
“அனைத்தும் நீ அனைத்துப் பொருளும் நீ”[2]
என்ற பரிபாடல் அடியினால் இதனை அறியலாம்.
இங்ஙனம் எங்கும் பரவிநிற்கும் முதற்பொருளாகிய இறைவன் அடியார்களின் துன்பங்களைக் களைந்து அவர்க்கு வேண்டுவன செய்யும்பொருட்டு இராமன், கிருஷ்ணன் முதலிய அவதாரங்களை மேற்கொள்ளுகின்றான். நாம் நல்வினை தீவினை இவற்றின் வயப்பட்டு அவற்றின் பயனை அநுபவிப்ப தற்கென்றே பிறக்கின்றோம்; அங்ஙனம் நம்மைப் பிறப்பிக் கின்றவன் இறைவன். ஆனால், இறைவனோ “பிறப்பில் பல்பிறவிப் பெருமான்.”[3] ‘பிறப்பில்லாதவர்’ என்றது