பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தொல்காப்பியம்-நன்னூல்



     வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஜம்முன் 
     அஃகா னிற்ற லாகிய பண்பே,          (தொல். 122)

   இது வற்றுச் சாரியை முதல் திரியுமாறு கூறுகின்றது. 
   (இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவை, இவை,உவை எனவும் ஐகாரவீற்றுச் சொல்முன்னர் வற்றுச்சாரியை வருங்காலை அவ் வற்றுச் சாரியையினது வகரமாகிய ஒற்றுக்கெட, அவ்வொற்றின்மேல் ஏறிய அகரம் கெடாது நிற்றல் அதற்குளதாகிய பண்பாம் எறு.
   ஆகிய பண்பு என்றதனால் எவன் என்பதனைப் படுத்தலோசை யாற் பெயராக நிறுத்தி வற்றுச்சாரியையும் உருபும் கொடுத்து வற்றுமிசை யொற்றென்று ணகரங்கெடுத்து அகரவுயிர் முன்னர் வற்றின் வகரங் கெடுமெனக் கெடுத்து எவற்றை எவற்றொடு எனப்புணர்ப்பர் நச்சினார்க்கினியர்.
     னஃகான் றஃகா னான்க னுருபிற்கு.     (தொல், 123) 
   இது னகரவீற்றுச் சாரியைகளின் னகரம் திரியுமாறு கூறுகின்றது. 
   (இ-ள்) இன், ஒன், ஆன், அன் என்னும் நான்கு சாரியைகளின் ஈற்றிலுள்ள ணகரம் நான்காமுருபு வருமிடத்து றகரமாய்த் திரியும் எ-று.
   (உ-ம் விளவிற்கு, கோஒற்கு, ஒருபாற்கு, அதற்கு எனவரும்.
     ஆனி னகரமு மதனோ ரற்றே 
     நாள்முன் வரூஉம் வன்முதற் றொழிற்கே.    (தொல்.124) 
   இஃது ஆன்சாரியையின் ஈறு பொருட் புணர்ச்சிக்கண் திரியுமென்கிறது.
   (இ-ள்) நாட்பெயர் முன்னர்வரும் வல்லெழுத்தை முதலாக வுடைய தொழிற் சொற்கு இடையே வரும் ஆன்சாரியையின் னகரமும், நான்கனுருபின்கண் வரும் ஆன்சாரியையின் னகரம் போல றகரமாய்த் திரியும் எ-று.
   (உ-ம்) பரணி + ஆன்+கொண்டான் = பரணியாற் கொண்டான் என வரும். ஆனின்னகரமும் என்ற உம்மையால் நாளல்லவற்றின் முன்வரும் வன்முதற்றொழிற்கண் இன்னின் னகரமும் றகரமாய்த் திரியுமெனக்கொண்டு பனியிற் கொண்டான், பறம்பிற்பாரி என உதாரணங் காட்டுவர் நச்சினார்க்கினியர்.