பக்கம்:தொழில் வளம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

தொழில் வளம்


மேற்பட்ட பல தொழிற் பள்ளிகள். அண்மையில் பெண்களுக்காகவும் தொழில் பள்ளிகள் அமையப் பெறுகின்றன என அறிகின்றோம். மற்றும் பெருந் தொழிற்சாலைகளில் அவ்வத் தொழில்களை அறிந்து கொள்ள மாணவர்களைச் சேர்த்து அவர்களுக்கு உபகாரச் சம்பளம் தரும் நிலையையும் காண்கின்றோம். பல்கலைக் கழக அடிப்படையில் இத்தகைய நாட்டுத் தொழில்களும் அத்தொழில் வளர்ச்சிக்குரிய ஆராய்ச்சி அமைப்புகளும் நிறுவப் பலவகையில் நாட்டில் தொழில் கல்வி வளருகின்றது. இவை பற்றிப் பின் தனியாகவே காண்போம்.

தொழில்வளர்ச்சிக்கு மற்றொரு முக்கியமான பொருள் மின்சாரமாகும். இன்று நாட்டில் மின்சாரம் நீர் வழியும் அனல் வழியும் உண்டாக்கப் பெறுகின்றது. மின்சார வளர்ச்சியில் நாடு உரிமை பெறுவதன் முன்பிருந்தே. தமிழ்நாடு ஓரளவு சிறந்து வந்துள்ளது. இன்று தமிழ் நாட்டில் ஐந்து நீர் மின்சார நிலையங்களும், இரு அனல் மின்சார நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றின் உற்பத்தி நாட்டின் தேவையை இன்று ஓரளவே நிறைவு செய்கின்றது. எனினும், தமிழ்நாட்டு அரசாங்கம் தாராளமாக ஆந்திரம் போன்ற அண்டை நாடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அண்மையில் தொழிற்பட இருக்கும் (இந் நூல் வருவதற்குள் தொழிற்படும்) நெய்வேலி அனல் மின்சார நிலையம் நாட்டின் தேவையை அதிகமாக நிறைவேற்றிவைக்கும். இன்னும் இத்துறையை வளர்க்க வேண்டிய தேவையுள்ளது. இம் மின்சாரம் பற்றியும் தனியாகப் பின்னாக ஆராயலாம் என்ற காரணத்தால் இத்துடன் அமைகின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/167&oldid=1382058" இலிருந்து மீள்விக்கப்பட்டது