வாழ்வின் தேவை
27
யிருந்து பனியிலும் மழையிலும் நனைந்து கொண்டிருக்க, மற்றவர் பட்டுடுத்து மச்சுவீட்டில் வாழ்வதா?' என்று மேடைப் பேச்சாக மாற்றியிருக்கிறார்கள். எனவே உலகம் இன்றும் எவ்வளவு முன்னேற்றமடைந்ததாகக் கூறிக் கொண்டாலும், இந்த அடிப்படைத் தேவைகளை, எல்லோருக்கும் நிறைவு செய்து விட்டோம். என்று உலக அரசாங்கங்கள் கூறிக்கொள்ள முடியாதல்லவா! இன்னும் பட்டினிச் சாவுகளும் உடல் மறைக்கக் கந்தை அற்ற அனாதை வாழ்வும் இல்லையா? இந்த உணர்வு பிறந்து இவற்றையெல்லாரும் பெறத் தந்தால் மற்றவை இயல்பாக அமைந்துவிடும். இந்த உண்மையை மேடையில் பேசுகின்ற அளவுக்குத் தலைவர்கள் செயலில் காட்டுவார்களாயின் பயன் உண்டாகுமே! - பொறாமை - பூசல் - திருட்டு- இலஞ்சம் கொலை முதலியன பசியின் விளைவே. மேலை நாடுகளில் இவைகள் ஓரளவு இல்லாததற்குக் காரணம் அந்நாட்டு அரசாங்கங்கள் மக்களுக்கு உணவும் உடையும் நிறையக் கிடைக்கச் செய்வதே.
‘உண்பது நாழி உடுப்பன இரண்டே
பிறவு மெல்லாம் ஓரொக் கும்மே’
(புறம்: 181)
என்று இதையே இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர்த் தமிழ்ப்புலவர் நக்கீரர் சொல்லிச் சென்றாரல்லவா? உலகம் என்று உணருமோ?
உணவை மட்டும் தேடிய அந்த ஆதி மனிதனுக்கு உடையின் தேவையும் உண்டாகிய காலத்தில் அவனுக்குப் பஞ்சும் பட்டும் அறிமுகமாகாத பொருள்கள். எனவே அவன் தன் உணவுக்குப் பயன்பட்ட விலங்குகளின் தோலையே ஆடையாக அணிந்தான். மரத்தின் தழைகளையும் பட்டைகளையும் பின்னி