பக்கம்:தொழில் வளம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபமும் தொழில் வளமும்

299


அறிவற்ற பொருளாசை பெருக்கும் வணிகர்கள் மட்டுமன்றி, உலகுக்கு அறிவுணர்த்த வேண்டிய கற்றவர் எனத் தக்க சிற்சில அறிவாளிகளும் கூட இத்தகைய மட்டமான உணர்ச்சிகளுக்கு மக்களை இரையாக்கும் கதைகளையும் நூல்களையும் எழுதுகிறார்கள்-படங்களை உண்டாக்குகிறார்கள்-வண்ண ஆடைகளைக் கண்டு மகிழ்கிறர்கள். அரசியல் தலைவர்கள் சிலரும் அத்தகையோரைத் தடுப்பதற்குப்பதில் கைகொடுத்து வரவேற்கின்றார்கள். இந்த நிலை மாறினால்தான் நாட்டில் வாணிபமும் தொழிலும் நாட்டு மக்களது பண்பாட்டையும் நாகரிகத்தையும் வளர்க்கும்சிறப்பு விளங்கும்.

நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் சில அடிப்படைகளிலேதான் உற்பத்தி செய்யப்படுகின்றன. தத்தம் அன்றாட வாழ்க்கைக்கு வீட்டிலும் நாட்டிலும் பயன்படுகின்ற பொருள்களை உற்பத்தி செய்தலும், வேறு தேவையான பொருள்களை விளைப்பதற்கும் உற்பத்தியாக்குவதற்கும் பயன்படு கருவிகள் செய்தலும், அழகுக்கு அழகு செய்து கண்காணப் பயன்படும் பொருள்கள் செய்தலும், பொருளாதார அடிப்படையில் எளிய முறையில் அமையப் பயன்படும் பொருள்களைச் செய்தலுமாகப் பலவகையில் சமுதாய வாழ்வுக்குத் தேவையான பொருள்களை உண்டாக்குவர் உற்பத்தியாளர். இவற்றுள் ஒவ்வொன்றும் சமுதாய வாழ்வுக்குத் தேவை என்பதையும் அவற்றை எவ்வெவ்வகையில் உற்பத்தி செய்ய வேண்டுமெனவும் உற்பத்தியாளர் ஆராய வேண்டும். இவற்றின் தேவை நாடுதோறும் வேறுபடலாம். உதாரணமாக, அடுப்படியில் உணவு தயாரித்து உண்பதற்குத் தமிழ் நாட்டில் தேவையான பொருள்கள் வேறு ; ஆங்கில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/302&oldid=1381998" இலிருந்து மீள்விக்கப்பட்டது