பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

107


“அப்போது சிவாஜி கணேசன் எங்கே இருந்தார்?”

எங்க நாடகக் கம்பெனியிலேதான் இருந்தார்.... ‘கொள்ளைக்குப் போனாலும் கூட்டு உதவாது'ங்கிறாங்களே, அது எங்க பார்ட்னர்ஷிப் விஷயத்திலே படு உண்மையாப் போச்சு...”

“இப்போது அப்படிச் சொல்லாதீர்கள்!.. இது கூட்டுறவு யுகம், எல்லாவற்றையுமே கூட்டுறவில் செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...!”

“ஆமாம்; தனியார் கொள்ளை வேறே, கூட்டுறவுக் கொள்ளை வேறேயாக்கும் ?...'பப்ளிக்"கைப் பொறுத்த வரையிலே எல்லாக் கொள்ளையும் ஒரே கொள்ளை தான் ..அதை விடுங்க...அதுக்கு ஏத்தாப்போல அப்போ எங்க நாடகக் கம்பெனி நஷ்டத்திலே நடந்துக்கிட்டிருந்தது... ‘என்னாலேதான் நஷ்டம்’, னார் பார்ட்னர்; இல்லே, உன்னாலேதான் நஷ்டம்'ன்னேன் நான். அவர் சொன்னதை நான் ஒப்புக்கல்லே, நான் சொன்னதை அவர் ஒப்புக்கல்லே... ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம்... பிரிஞ்சிட்டோம்னா கம்பெனி அவர் கைக்குப் போயிடல்லே, என் கையிலேதான் இருந்தது. ஈரோடை விட்டுக் கோபிச்செட்டிப்பாளையத்துக்குப் போய் நாடகம் நடத்தினா, வசூல் கொஞ்சம் நல்லாயிருக்கும்னு தோணுச்சி. ஆனா எப்படிப் போறது... ?”

“ஏன், அதற்குள்ளே அடுத்த ஊருக்கு நாடகச் சtrமான்களை எடுத்துக்கொண்டு போகவே கையில் காசில்லாமல் போச்சா ?”

“அது மட்டுமில்லே, கொட்டகைக்காரருக்கு வேறே இருநூறு ரூபா பாக்கியிருந்தது...”

“கோபிச்செட்டிப்பாளையம் பக்கத்திலேதானே இருந்தது?...அங்கே போய்க் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே ?”

“சொன்னேன்; அவர் கேட்கல்லே..."