பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

விந்தன்


"அவரும் ஒரு சமயம் ஜகந்நாதய்யர் கம்பெனியிலே சேர வந்தார். ஆனா அவர் மட்டும் வரல்லே, அஞ்சி அண்ணன் தம்பிகளைக் கூட அழைச்சிக்கிட்டு வந்தார். ‘ஒருத்தனுக்காக இத்தனை பேரை வெச்சி என்னாலே சமாளிக்க முடியாது'ன்னு சொல்லி, அய்யர் அவரை அனுப்பிவிட்டார்.”

“சங்கரதாஸ் சுவாமிகள்... ?”

“வருவார்; இருப்பார். குடித்துவிட்டு ஆடினால், ‘இது நமக்குப் பிடிக்காது; நீ போய்விட்டு வா!’ என்று அய்யர் அவரை வெளியே அனுப்பிவிடுவார்.”

“அவரை இன்று சிலர் நாடக உலகத் தந்தை என்று சொல்கிறார்களே ?”

“அதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர் நல்ல நாடகாசிரியர்; பாடலாசிரியர். எழுத ஆரம்பித்தால் தங்குதடையில்லாமல் எழுதுவார்... அதெல்லாம் சரி. ஆனா, இப்போதே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்ட புராண இதிகாச நாடகங்களுக்கு வேண்டுமானால் அவர் தந்தையாயிருக்கலாமே தவிர நாடக உலகத்துக்கு ஒரு நாளும் தந்தையாயிருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் அவர் ஜகந்நாதய்யராய்த்தான் இருக்க முடியும். ஏன்னா, இன்னிக்கு இருக்கிற அத்தனை கலைஞர்களும் அவருடைய வழி வழியா வந்த கலைஞர்களே. இதை யாராலும் மறுக்க முடியாது.”

“ஜகந்நாதய்யர் கம்பெனியை விட்டு நீங்கள் வேறு எந்தக் கம்பெனிக்கும் போகவில்லையா ?”

“இல்லை; போகவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

அதோடு அந்தக் கம்பெனியிலே நான் நடிகனாக மட்டும் இல்லை; கார் டிரைவராகவும், மெக்கானிக்காகவும், எலெக்ட்ரிஷியனாகவும் இருந்தேன்!”

“எலெக்ட்ரிஷியனாகவா! அதில் என்ன வேலை தெரியும் உங்களுக்கு ?"