பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146



அதற்கு அவர்கள் இருவரும், “இவ்வாறு செய்யுமாறு ஆண்டவன் தங்களுக்குக் கட்டளை பிறப்பித்திருக்கிறானா? அல்லது தங்களுடைய சொந்தக் கருத்தா? ஆண்டவனுடைய கட்டளை இவ்வாறு இருக்குமானால், அதை நாங்கள் மறுத்துக் கூற இயலாது. தங்களுடைய சொந்தக் கருத்தாக இருக்குமானால், எங்களுடைய கோரிக்கையையும் கேட்டுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்", என்று கூறினர்.

பெருமானார், “அது தங்களுடைய சொந்தக் கருத்தே” என்று சொன்னார்கள்.

அவர்கள் இருவரும், “நாங்கள் ஆண்டவனுக்கு இணையாக விக்கிரகங்களை வணங்கிக் கொண்டு, ஆண்டவனைப் பற்றிய அறிவும், ஆண்டவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க முறைகளும் கொஞ்சமும் அறியாமல் காலம் கழித்துக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், மதீனாவிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட விலையில்லாமல் கொண்டு போவதற்குக் கத்பான் கூட்டத்தாருக்குத் துணிவு இல்லாமல் இருந்தது. அப்படியிருக்கும் போது, தங்கள் மூலமாக ஆண்டவன் எங்களுக்கு நேர் வழியைக் காட்டி, எங்களைப் பெருமைப்படுத்தியிருக்கும் இந்தக் காலத்தில், நாங்கள் மதீனாவின் மகசூலில் மூன்றில் ஒரு பாகத்தைக் கொடுக்கலாமா? அவர்களுக்குக் கொடுப்பதற்கு இப்பொழுது எங்களிடம் வாளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை” என்று தெரிவித்தார்கள்.

இதைக் கேட்டதும் அன்ஸாரிகளும் உறுதியுடனே இருக்கிறார்கள் என்பதைப் பெருமானார் அறிந்து திருப்தி அடைந்தார்கள்.


110. பலமான எதிரி ஒருவர் மாண்டார்

குறைஷிகளின் பிரபலமான தளபதிகளான அபூ ஸூப்யான், காலித் இப்னு வலித், அம்ருப்னுல் ஆஸ், ஸிரரர் இப்னுல் கத்தாப், ஸூபைரா ஆகிய ஐவரும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் தலைமை ஏற்றுப் போர் புரிந்தார்கள்.

அவர்களால் அகழைக் கடக்க இயலவில்லை. படைகளை எல்லாம் ஒரே பக்கமாகத் திரட்டி, அகழில் அகலக் குறைவான பகுதியைத்