உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

நற்றிணை தெளிவுரை


283. இன்னை ஆகுதல் தகுமோ ?

பாடியவர் : மதுரை மருதனிள நாகனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. (2) கடிநகர் புக்க தோழி பிற்றைஞான்று வேறுபடாது ஆற்றினாய் என்று சொல்லியதூஉம் ஆம்.

[(து.வி.) (1) பகற்குறியிடத்தே வந்த தலைமகனை எதிரே கண்டாளான தோழி, 'இவளை வரைந்து வந்து மணந்து கொள்வதற்கு முயல்வாயாக' என்று உள்ளுறையால் உணர்த்துவதாக அமைந்த செய்யுள் இது.

(2) தலைவியை மணந்து கொண்டு தலைவன் இல்லற வாழ்விலே திளைத்து வருகின்ற காலத்தில், தோழி தலைவன்பாற் சென்று அவனைப் பாராட்டிக் கூறியதாக அமைந்த செய்யுளும் இது.]


ஒண்ணுதல் மகளிர் ஓங்குகழிக் குற்ற
கண்நேர் ஒப்பின் கமழ்நறு நெய்தல்
அகல்வரிச் சிறுமனை அணியுந் துறைவ!
வல்லோர் ஆய்ந்த தொல்கவின் தொலைய
இன்னை யாகுதல் தகுமோ? ஓங்குதிரை 5
முந்நீர் மீமிசைப் பலர்தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்
வாய்மை சான்றநின் சொல்நயந் தோர்க்கே.

தெளிவுரை : ஒளியுடைய நெற்றியைக் கொண்டவரான பெண்கள், அகன்ற கழியிடத்தே யிருந்தும் பறித்துவந்த, மகளிரது கண்ணை நேராக ஒத்தலையுடையதும், மணம் கமழ்கின்றதுமான நறிய நெய்தல் மலர்கள், அகன்ற, கையாலே அமைத்துக் கோலஞ் செய்த சிற்றில்லை அழகுபடுத்தியிருக்கும் துறைகளையுடைய தலைவனே! உயர்ந்து வரும் அலைகளைக் கொண்ட கடலின் மேலாகப், பலரும் போற்றித் தொழுமாறு தோன்றுதலைச் செய்து, யாவரும் இன்பமடையும்படியாக விளங்கும் ஞாயிற்றினுங் காட்டில், வாய்மை விளங்கிய நினது பேச்சையே விரும்பிய எம்மனோர்க்கு, அறிவுடையோரால் ஆய்ந்து கண்ட பழைய அழகெல்லாம் தொலையும்படியாக, நீதான் இத்தன்மையனாகுதல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/182&oldid=1675124" இலிருந்து மீள்விக்கப்பட்டது