உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

நற்றிணை தெளிவுரை


நீ தான் நெடிது வாழ்வாயாக என்கின்றனள். தோழி கூற்றாக அமைந்த இச்சொற்களிலே பெருமிதப் பண்பும், வரைவுகடாதலும், ஒருங்கிணைந்து மிளிர்கின்றன!

வேறு பல் நாட்டிற் கால்தர வந்த பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை என்பது, பழந்தமிழ் நாட்டு வாணிக வளத்தை உணர்த்துவதாம். மகளிரது இளமை நலத்தைக் கட்சாடிக்கு உவமித்த நயத்தைச் சிந்தித்து உணர்ந்து களிக்க வேண்டும்.

296. படர் உழந்து ஒழிதும் !

பாடியவர் : குதிரைத் தறியனார்; குதிரைத் துறையனார் எனவும் பாடம்.
திணை : பாலை.
துறை : தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது.

[(து.வி.) தலைவன் கார்காலத்தேயும் வினைப்பொருட்டாகத் தலைவியைப் பிரிந்து போவதற்குக் கருதியதனைத் தோழி வாயிலாகக் கேட்ட தலைவியானவள், அவளுக்குத்தன் நிலையைத் தெளிவிக்கக் கூறியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]


என்னா வதுகொல் தோழி? மன்னர்
வினைவல் யானைப் புகர்முகத் தணிந்த
பொன்செய் ஓடை புனைநலம் கடுப்பப்
புழற்காய்க் கொன்றைக் கோடணி கொடியிணர்
ஏகல் மீமிசை மேதக மலரும்
பிரிந்தோர் இரங்கும் அரும்பெறற் காலையும்
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச்
செல்ப என்ப காதலர்
ஒழிதும் என்பநாம் வருந்துபடர் உழந்தே!

தெளிவுரை : தோழீ! மன்னர்கட் குரியவான போர் வினையிலே வல்லமையுடைய யானையானது, புள்ளிகொண்ட முகத்திலே யணிந்துள்ள, பொன்னாற் செய்த நெற்றிப் பட்டத்தின் புனைதல் சிறந்த அழகைப்போல, புழல் அமைந்த காய்களைக் கொண்ட கொன்றைமரத்தின் கிளைகளிலே கொடிகொடியாகத் தூங்கும் சரக்கொன்றையின் பூங்கொத்துக்கள், பெருமலையின் மிக உயர்ந்த பக்கத்தே, மேன்மைப்பட மலரா நிற்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/206&oldid=1675984" இலிருந்து மீள்விக்கப்பட்டது