உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

நற்றிணை தெளிவுரை


225. இரந்தாரும் உள்ளாரோ?

பாடியவர் : கபிலர்.
திணை : குறிஞ்சி.
துறை : (1) வன்புறை எதிரழிந்தது; (2) பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.

[(து-வி.) (1) பிரிவாலே வருந்தி நலனழியும் தலைவியைத் தெளிவிக்க நினைத்த தோழி, அவள்பாற் சென்று, 'அவர் இன்றே வருவார்; வருந்தாதே' என்று வலியுறுத்திக் கூறுகின்றாள். தலைவன் வருகையைப் பல நாட்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து எதிர்பார்த்து, அவன் வரவைக் காணாமல் வாடியிருக்கும் தலைவி, அதனைக் கேட்டதும், தன் பொங்கிவரும் துயரத்தை ஆற்ற மாட்டாதவளாகக் கூறுவது போல அமைந்த செய்யுள் இது.

(2) காதற்பரத்தையானவள் தலைமகட்குப் பாங்காயினார் கேட்கும்படியாகத், 'தலைவன் தானே விரும்பி வந்து என்னைச் சேர்ந்திருப்பதனை நினைந்து, தலைவி உள்ளம் வருந்துவதனாலே யாது பயனோ?' எனச் செருக்கிக் கூறியதுமாம்.]


முருகுறழ் முன்பொடு கடுஞ்சினம் செருக்கிப்
பொருத யானை வெண்கோடு கடுப்ப
வாழை ஈன்ற வையேந்து கொழுமுகை
மெல்லியல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல்வரும் மால்வரை நாடனை 5
இரந்தோர் உளர்கொல், தோழி? திருந்திழைத்
தொய்யில் வனமுலை வரிவனப்பு இழப்பப்
பசந்தெழு பருவரல் தீர
நயந்தோர்க்கு உதவா நாரின் மார்பே!

தெளிவுரை : தோழீ! திருத்தமாகச் செய்யப் பெற்ற அணிகலனை அணிந்தவும், தொய்யிற் குழம்பாலே எழுதப் பெற்ற அழகினைக் கொண்டவுமான வனப்புடைய முலைகளது இரேகையின் அழகெல்லாம் இழந்துபோகும்படியாகப் பசலை நோயானது பாய்வதனாலே உண்டாகின்ற, பிரிவுத்துயராகிய வருத்தம் எல்லாம் நீங்குவதற்குத் தன்னைக் காதலித்தோர்க்கு உதவியாக அமையாத, அன்பற்ற மார்பினை உடையவன், நம் காதலன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/68&oldid=1664056" இலிருந்து மீள்விக்கப்பட்டது