பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அங்கம் 3

காட்சி 1

அரண்மனையின் ஒரு புறத்தில், முல்லை, கிள்ளை, சாலி மூவரும் பேசியிருக்கிறார்கள்.

கிள்ளை : இளவரசி! ஏதாவது படிக்கலாமே

சாலி : வேண்டாம் ஏதாவது விளையாடினால் நன்றாய் இருக்கும்.

முல்லை : படிக்கலாம் கிள்ளை! நீ போய், அம்மா நீராடும் அறைக்கு இந்தப் புறத்தில் ஊஞ்சலின் மேல் கவிதை நூல் இருக்கிறது. எடுத்து வா.

[அவள் சென்று எடுத்துவந்து, தானே அதைத் திறந்து பார்க்கிறாள்.]

கிள்ளை : இதைக்கேள் ! சாலி, கவனமாய்க் கேள் நீயும்.

பச்சை பசுந்தழைக் காட்டினிலே ஒரு

பக்கத்தில் பூத்திட்ட முல்லையைப் பார்

அச்சடையாளம் நல் வான்குளத்தில் மின்னும்

ஆயிரம் மீனெனத் தோன்றுமடி !

அச்சில் அடித்திட்ட வெள்ளிப் பணம் கையில்

அள்ளி இறைத்தது போல் இருக்கும்!

இச்சை நறுமணத் தால்அழைக்கும்--முல்லை

ஏன் என்று பார்க்கையிலே சிரிக்கும்!

[முல்லை சிரித்தாள்.]

கிள்ளை : முல்லை, ஏன் என்று பார்க்கையிலே சிரிக்கும் !

சாலி : முல்லைக்கு முல்லைப் பொட்டு!

[கிளியின் கூச்சல் கேட்கிறது.]