பாரதிதாசன்
21
அரசர் : கன்னல்! அதைப்பற்றி நீ வருந்தாதிருந்தால் போதும். முப்பது ஆண்டுகள் இன்பத்தை நல்கிக் கழிந்தன. வாழ் நாட்களில், ஐம்பது ஆண்டுகள் கழிந்தபின் திருமண கணையாழி காணாமற்போனால், அதனால் குற்றமில்லை. நீ மறந்திரு. இம்மியளவு துன்பத்தையும் உன் நெஞ்சு தாங்காது.
அரசி : யார் எடுத்திருப்பார் ? குற்றவாளியை விட்டு வைத்தால் இன்னும் இதுபோல நடக்குமே!
அரசர் : அரண்மனை ஆட்களையும், பணிப் பெண்களையும், காவலர்களையும், உடற்காப்பாளர்களையும், மற்றும் இங்கு வருவோர் போவாரையும் கேட்டு ஆராய்வோம்.
அரசி : கோள் நிலை வல்லுனர் கூற மாட்டாரா?
அரசர் : கோள் நிலை வல்லவர் கூறுவதைக் கொண்டு குற்றத்தை உறுதி செய்வதை முட்டாள் தனமென்று அற நூல் கூறுகிறது. உணர்வும் ஒத்துக்கொள்ளாது.
முல்லை : அப்பா!
அரசர் : ஓடிவா குழந்தாய்.
முல்லை : அகப்பட்டதா அம்மா?
அரசி : இல்லை முல்லை !
அரசர் : உன்னிடம் வந்து பேசிப் போகும் பெண்களில் யார்மேலாவது ஐயப்பட இடமுண்டா குழந்தாய்!
முல்லை : இல்லை அப்பா கிள்ளை, சாலி, தாழை, பொன்னி, தோரை, உண்மையின் அடையாளங்கள், இனி இங்கு வரவேண்டாம் என்று அவர்களைச் சொல்ல நினைக்கிறீர்களா அப்பா.