பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

நல்ல தீர்ப்பு

 

கிள்ளை : நான் இப்போதே தானே போய் விட வேண்டும் ? இப்படித்தான் தீர்ப்பளித்தீர்கள் என்று என் தந்தையாரிடம் நான் சொன்னால் அவர் நம்பமாட்டார். வேண்டுமென்று நானே சொல்லுவதாக அவர் நினைப்பார். அவரையும் அழைத்துத் தீர்ப்பைச் சொல்லி விடும்படிதங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

முல்லை : ஆம் ஆம்!

[மீண்டும் சிரிப்பு]
இதற்குள் பேரரசியார் மன்று நோக்கி வருவதாகக் கூறத் தோழி ஒருத்தி அங்கு வருகிறாள். அவளை அனைவரும் நோக்கியிருக்கிறார்கள்.

தோழி : பேரரசே! பேரரசியார் மன்று நோக்கி வருகிறார்கள்.

[அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். அரசியார் அரசரிடம் கணையாழியை நீட்டுகிறார்]

பேரரசி : அகப்பட்டு விட்டது. கிள்ளை குற்றவாளியல்ல .

கிள்ளை : அதெப்படி ? தீர்ப்பை மாற்றக் கூடாது பேரரசே!

அரசர் : நீ குற்றவாளி என்றுதானே அந்தத் தீர்ப்பைச் செய்தேன். இப்போது நீ குற்றவாளியில்லை, தீர்ப்பை மாற்றத்தானே வேண்டும்?

கிள்ளை : நான் தீர்ப்பளிக்கு முன் எப்படியோ அப்படித்தான் இப்போதும் அப்போதைக்கு இப்போது என்ன வேறுபாட்டைக் கண்டீர்கள்?

அரசர் : தீர்ப்புக்கு முன் இருந்த நிலையில் நீ இப்போது இல்லையே!