உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நல்ல தீர்ப்பு


பிறை நாட்டின் தென்புறத்தில் அமைந்த குளிர் மலர்ச் சோலையில், கோடையின் கொடுமை நீங்கி இருக்க, அந்நாட்டரசனாகிய வயவரி மன்னனும், அரசி கன்னலும், இளவரசி முல்லையும் வந்திருந்தனர். பிறை நாட்டின் படைத் தலைவன் மாழையும், மனைவி கண்ணியும், மகள் கிள்ளையும் வந்திருந்தனர். நாட்டின் அமைச்சு வல்லுளியும், மனைவி வேலியும், மகள் சாலியும் வந்திருந்தனர். மற்றும் கல்விச் செல்வரும் பொருட் செல்வரும் உறவோடு வந்திருந்தனர்.

மற்றும் பிறை நாட்டின் மேற்கில் உள்ளதும் பிறை நாட்டின் சிற்றரசாய் அமைந்ததும் ஆகிய பீலி நாட்டின் மன்னன் கடம்பனும், அரசி ஆம்பலும், இளவரசி நிலவும் வந்திருந்தனர். குளிர் மலர்ச் சோலையில், அவர்கள் இனிதாக நாள் கழித்தார்கள், ஒவ்வொரு நாளும் விழா நாள்.

இன்று மகளிர் தனி நாள்

சிற்றரசன் மகள் நிலவு அரங்கேறுகின்றாள். மற்றப் பெண்டிர்கள் காட்சி காணும் அவாவோடு சூழ வீற்றிருக்கின்றனர்.

இசைக் கருவிகள் வாய் திறக்கின்றன. ஆடலாசிரியன் பாடுகின்றான்.

நிலவு ஆடுகின்றாள்

களை யெடுத்தார் பல பெண்கள்!- கீழ்க்
கவிந்தனவே அவர் கண்கள்!
வளை குலுங்கும் கைகள் ! வளைந்திடும் மெய்கள்
விளைவைக் கொடுக்கும் அல்லி, குவளை, செந்தாமரைக்

                                               களை யெடுத்தார் பல பெண்கள்