பாரதிதாசன்
7
படைத் தலைவன் மகள் கிள்ளை, தங்கச் சிலை போல் இன்னும் செயலற்றுக் கிடக்கின்றாள். அமைச்சன் மகள் சாலி, நெஞ்சில் இன்பம் தாங்காமல் அழுகின்றாள். அவள் கண்கள் மகிழ்ச்சியை நீராக்கி வடிக்கின்றன.
பேரரசி கன்னல் அரங்கின் மேல் ஏறுகிறாள். நிலவின் கலைத்திறம் பற்றிப் பாராட்டிப் பேசலுற்றாள்.
நிலவே, உன் கலைவாழ்வு பல்லாண்டு நிலவுக!
நிலவே, உன் வாழ்நாள் காவிரிபோல் பெருகுக!
துன்ப உலகினின்றும் இன்ப உலகிற்கு எமை அழைத்துச் சென்றாய். தாழ்ந்த செயல்களை, தாழ்ந்த நினைவுகளை இமைப்போதும் நீங்காத எம்மை அமைதியில் குளிக்க வைத்தது உன் ஆடல்!
நிலவே! இத்தனை பெரிது; இத்தனை சிறந்தது; இத்தனை இன்பம் பயப்பது; ஆட்டக்கலை என்பதை இன்று அறிந்தோம்.
ஆடல், பாடல், அழகு எனும் மூன்றும் ஒன்றும் குறையாத முழுநிலவே, நான் இன்று உனக்குத் தரும் பரிசு ஒன்று.
உன் தந்தை எம் அரசர்க்கு நடக்கவும் தெரியாத இளயானைக் கன்று ஒன்றைத் தந்தார். அந்த ஆண் யானைக் கன்றானது எம்மிடம் முப்பது ஆண்டுகள் வாழ்ந்து பின், இறந்தது. அதன் தந்தமானது முத்துப்போல் ஒளியுள்ளதாகவும், வயிரம் போல உறுதியுள்ளதாகவும் இருந்ததால் அதைப் பொற் கொல்லரிடம் தந்தோம். அவன் அந்தத் தந்தத்தில், அறுத்து, வயிரம் பதித்துத் தந்தது இந்தப் பதக்கம். அதை உனக்குத் தந்தேன்.