பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

நவகாளி யாத்திரை


மகாத்மாவைக் கண்டு பேசி உத்தரவு பெறலாமென்ற ஆசையுடன் நிர்மல்குமார் போஸை அணுகி மகாத்மாவைக் காண அனுமதி கோரினேன். நிர்மல்குமார் போஸ் மிகவும் கண்டிப்பான பேர்வழியாக இருந்தார்.

நான் நயமாகக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் 'பட் பட்' என்று பதில் கூறினார். "மதராஸிலிருந்து வருகிறேன். மகாத்மாவைப் பார்க்க வேண்டும்“ என்று நான் கூறியதும், "மதராஸிலிருந்து உம்மை யார் வரச் சொன்னது?" என்று பதில் கேள்வி கேட்டு என்னைத் திணற அடித்தார்.

"யாருமில்லை; நானாகவேதான் வந்தேன்“ என்று பதில் சொன்னேன்.

“சரி; நீராகவே திரும்பிப்போம்“ என்றார்.

“மகாத்மாவை...“

“அதுதான் முடியாது.”

என் மனோநிலை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம்.

வேறு வழி இல்லாமற்போகவே, திரு. நிர்மல்குமார் போஸ் அப்படி இப்படிப் போகிறாரா என்று சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆசாமி அந்த இடத்தைவிட்டு நகருவதாயில்லை.

கடைசியாக நிர்மல்குமார் போஸ் மகாத்மாஜி தங்கியிருந்த வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தார். என்னை ஒரு கணம் புன்முறுவலுடன் ஏற இறங்கப் பார்த்தார்.