பக்கம்:நாடும் ஏடும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம் நாட்டிலே ஓர் மன்னன் வேட்டைக்குச் சென்றான், வழியிலே ஓர் குளம், அக்குளத்திலே தவளைகள் கரகர வென்று ஓசையிட்ட வண்ணமாயிருந்தன. அரசன் மகா சிவபகதன். சிவ புராணங்களைக் கரைகண்டவன்; அவன் காதிலே இந்தக் கரகர என்ற ஓசை அரகர என்று வீழ்ந்தது. வீழலும் அம்மன்னவன் மனம் மிக நொந்தான் ஏன்? சிவநேசர்கள் குளத்தில் குளிரினால் வாடுகின்றார்களே என்ற ஏக்கத்தால். உடனே காவலாளர்க்குக் கட்டளை யிட்டான். அரண்மனைப் பொக்கிஷத்தைக் குளத்தில் கொண்டு வந்து போடுங்கள்; அவை அடியார்க்கு உபயோகப்படட்டும்" என்று. தவளைகள் சப்தத்தையும் தவறாகக் கேட்டான். வேந்தன் தவளைகட்குப் பொன்னும் மணியும் உதவுமா என்று பகுத்துணரவில்லை. அந்தப் பொன்னும் மணியும் நாட்டிலே நலியும் ஏழைகளின் ஏக்கத்தை எத்துணை எளிதில் போக்கும் என்பதையும் எண்ணினானில்லை. குளத்தில் போடும் பொருள் எவர்க்கும் எத்துணையும் பயன்தராது என்பதறியாது மதமெனும் மயக்கத்திலாழ்ந்து, பக்தியெனும் பரிதாப வலையில் சிக்கி அறிவை அடகுவைத்துப் பொருளை வாரியிறைத்தான். இதைக் கேட்கும் போதும் ஏடுகளில் பார்க்கும்போதும் நமக்கு நகைப்புத்தான் வருகின்றது. அம்மன்னன்பால் இரக்கமும் உண்டாகின்றது. மதப்பற்றினால் மன்னன் மதியிழந்ததைப்போல் மன்னன் வரலாற்றை ஏட்டிலே காணும் நாட்டு மக்கள் எத்தனை பேர் இன்னும் மதியை மதத்தின்பால் மண்டியிட்டுப் பறிகொடுப்பர் என்ற எண்ணம் எமை வாட்டுகின்றது, எனவே இத்தகைய மதம் கலந்த அநாகரிக, ஆபாச, புராணங்கள் நிறைந்த கதைகளைப் பாடுதற்கே ஏடுகள் பயன்படுமானால் அறிவு; ஆராய்ச்சி என்றாவது நம் நாட்டில் உதிக்குமா ஆண்மை பெருகுமா? ஆற்றல் அதிகரிக்குமா? வாழ்க்கையில் வளம்காண்போமா? வழங்குங்கள் இதற்கோர் நல்ல தீர்ப்பு வாலிபத் தோழர்களே!

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/32&oldid=1547549" இலிருந்து மீள்விக்கப்பட்டது