பக்கம்:நாடும் ஏடும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இத்தகைய கதைகளும் புராணங்களும் ஏடுகளும் இலக்கியங்களும் மக்களைக் கடவுளர்க்குத் திருப்பணி செய்வதிலும், திருவிழாக்கள் செய்வதிலும் அளவிறந்த பணத்தைச் செலவிட ஊக்குகின்றன. இதனால் ஏழை மக்கள் பணம், கல்வி, கேள்வி முதலியவற்றிற்குச் செலவிடப்படாமல் ஆச்சார அனுட்டானங்களுக்கும் ஆண்டவனின் நிவேதனத்திற்கும் அநாவசியமாகச் செலவிடப்படுகின்றது. அறிவு மழுங்குகின்றது; ஆராய்ச்சி குன்றுகின்றது; மடமை மலருகின்றது; மதி மடிகிறது, செல்வம் குறைகிறது; சமய சாதிச் சண்டைகள் வளருகின்றன; அமைதி அழிகின்றது; நாடு நவில்கின்றது; நாட்டார் நாசமாகின்றனர்; கலை, இலக்கியம், காவியம் யாவும் பண்டைய கலைகளோடு இலக்கியங்களோடு, காவியங்களோடு நின்றுவிட்டன; அவைகளைச் சுவைப்பதுதான் நன்று; அதுவே போதும்.

"தமிழ் நாடு போனாலும் போகட்டும்; கம்ப ராமாயணமே வேண்டும்" என்று நாட்டுப்பற்றின்றி கலைப் பற்றே (அதிலும் நாட்டோடு முற்றும் தொடர்பற்ற ஏடு) பெரிதும் மிகுந்து பழைய பத்தாம் பசலியையே பெரிதும் பிடித்து நிற்பாராயின், நான் உறுதியாகச் சொல்லுகின்றேன். அப்பண்டிதர்களின் காலமும் இத்துடன் முடிவடைந்தது என்று. ஏன்? இன்று உலகில் பலப்பல பகுதிகளிலும், ஏடுகள் காலத்திற்கும் கருத்திற்கும் நிலைமைக்கும் ஏற்ப மாறிக்கொண்டே வருகின்றன. சான்றாக கசபியான்கா என்ற சிறுவனின் கதையை எடுத்துக் கொள்வோம். கசபியான்கா என்னும் சிறுவன் தன் தந்தையோடு கப்பலில் சென்றான்; கடல் நடுவே கொடிய கப்பற் சண்டை நடந்தது, கசபியான்காவின் தந்தையும் ஒரு கப்பல் தலைவன் அவன் தன் மகனைக் கூப்பிட்டு ஓரிடத்திலே அவனை நிறுத்தி, "குழந்தாய் நான் அழைக்குமளவும் இவ்விடம் விட்டு நகராதே" என உரைத்து ஏதோ அலுவலாக அப்பாற் சென்றான்.

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/35&oldid=1547553" இலிருந்து மீள்விக்கப்பட்டது