பக்கம்:நாடும் ஏடும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சான்றாக ஏ. ஆர். பி. விதிகள் நகரிலே ஏற்படும் முன்னர் வண்டிகட்கு ஒளிமிகு விளக்குகள் போட வேண்டியது அப்போதைய காலத்திற்கு, நிலைமைக்கு, கருத்துக்கு ஏற்ற நீதி. ஆனால் ஏ. ஆர். பி. விதிகள் நகரிலே நடமாடத் தொடங்கின பின்னர் மங்கலான, முற்றும் மறைக்கப்பட்ட விளக்குகளுடனே வண்டிகள் நடமாட வேண்டியது என்பது இப்போதைய காலத்திற்கு, கருத்திற்கு, நிலைமைக்கு ஏற்ற நீதி. வலுத்தவன் இளைத்தவனை ஏய்த்தது ஒரு காலத்திலே நீதி அது இக்காலத்திலே செல்லுமா?

நீதியைக் காலத்திற்கும் கருத்திற்கும் நிலைமைக்கும் ஏற்ப நடுநின்று வழங்கும் ஏடுகள் தோன்றித்தான் தீரும். அத்தகைய நூல்களை இந்நாட்டு நாவலர்கள், பண்டித மணிகள், சொற்செல்வர்கள் செய்துதரல் வேண்டும். அதுவே முறை பழைய நீதிகளிலும் இன்றைக்கும் இயைந்து வருவனவற்றை வேண்டாமென்று எந்தப் புல்லறிவாளனும் புகலான். எனவே என் சொற்கேட்டு எவரும் மருளவேண்டாம் மனம் வைத்து மக்களுக்குப் பணிபுரியும் ஏடுகள், இனப்பற்றை மிக்கூட்டும் இலக்கியங்கள், கடவுளைக் கயவனாக்காத கதைகள், வாழ்ச்கை வளமுற வழிகாட்டும் வாழ்க்கைச் சரிதங்கள், வரலாறுகள், கற்பனைகள், காவியங்கள் செய்து தர முன் வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்கின்றேன் வாலிபத்தோழர்களே! என் சொல்லைக் கேளுங்கள்; கேட்டுச் சிந்தியுங்கள்! செயலுக்கு வேண்டுவதா செம்மைப்பட வழிகாட்டுமா? காட்டும் என்று கருத்திற்பட்டால் கலங்காது போரிடுங்கள்! வெல்வீர் விரைவிலே; வீழ்த்துவீர் வீணரை; நாட்டுக்கு நலம் பயப்பீர்; இனத்தை இசைபட வாழச் செய்வீர்! செய்வீர் என்று உங்கள் சிந்தனையைச் சற்றுத் தூண்டி விடுகின்றேன்; சீர்தூக்கிப் பாருங்கள்! அறிவினால் ஆராய்ந்து பாருங்கன்! அறம் எது என்று அதன் வழி நடவுங்கள்! நலன் எய்துங்கள்.

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/40&oldid=1547558" இலிருந்து மீள்விக்கப்பட்டது