பக்கம்:நாடும் ஏடும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகிலே உத்தமர்களின் ஓயா உழைப்பினாலும் அறிவாளிகளின் குன்றாத ஆராய்ச்சியாலும் உண்டாக்கப்படும் விஞ்ஞானக் கருவிகள் ஆகாய விமானங்கள் பறக்கும் குண்டுகள் முதலிய இன்னபிற புதுமைகள் எல்லாம் நம்முடைய பண்டைய புராண இதிகாசங்களிலிருந்து காப்பியடித்தவை என்று கழறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளல் போன்ற ஏமாளித்தனம் அல்லவா! நாட்டிலே ஆகாயவிமானம் ஆகாயத்திலே பறக்கும். கிராமத்தான் அதுகண்டு அதிசயமுறுவான். ஆ! ஆ! இந்த வெள்ளைக்காரன் என்ன கெட்டிக்காரன் என்பான். அத்தருணம் அண்டையிலே இருப்பார் இராமநாத சாஸ்திரிகளோ அல்லது சோமசுந்தர குருக்களோ எவராவது உடனே உரைப்பார்: "என்ன அப்பா பெரிய அதிசயத்தைக் கண்டுவிட்டாய் நம்முடைய புராணத்திவே இல்லாத ஆகாய விமானமா? இராமாயணத்திலே புஷ்பக விமானத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நேற்றுக்கூடக் கேட்டாயே; அதற்குள்ளாகவா மறந்து விட்டாய்! அந்தக் காலத்திலே இல்லாத விமானமா? எல்லாம் நம்முடைய வேதங்களிலிருந்து காப்பியடித்தவைதான். இன்னும் ஒரு சிறியவிஷயம் பார். அதோ பறப்பது என்ன? கருடன்.

கருடன் என்ன நேராகப் பறக்கிறது. பார்ப்பதற்கு ஆகாய விமானம் போல இல்லையா? அந்தக் கருடனைப் பார்த்துத்தான் அவனும் (வெள்ளைக்காரனும்) காப்பியடித்திருக்கிறான். அந்தக் 'கருடன் மெக்கானிசம்' தான் அந்த ஏரோப்பிளேனில் இருக்கின்றது. வேறென்ன?" என்று வாய் வேதாந்தம் பேசுவர்; அப்படியா சங்கதி நான் என்னமோண்ணு பார்த்தேனே என்று ஒரு அலட்சியப் பேச்சு பேசிவிட்டு வழிநடப்பான் கிராமத்தான். இத்தகைய உரையாடல் ஊரிலே, நாட்டிலே இல்லையென யாரும் இயம்ப முடியாது. இத்தகைய மனப்பான்மை நாட்டிலே வளரும். மட்டும் நாடு முன்னேறுமா?

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/41&oldid=1547559" இலிருந்து மீள்விக்கப்பட்டது