பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192 ♦ நான் கண்ட பெரியவர்கள்


ஸ்ரீகாந்தா அமர்ந்தார்கள். உறுதியாகச் சுவாமிகள் இருக்கமாட்டார்கள் என்ற துணிவுடன் சென்றோமாதலால் குடிலின் வாயிலை நெருங்குகின்றவரையில் பேசிக்கொண்டே சென்றோம். மூவரும் நுழைந்தவுடன் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளானோம். நாங்கள் வாய் திறந்து ஒன்றும் பேசவில்லை. பேசவும் முடியவில்லை. அந்த நிலையிலும் அந்த அருளாளர் “பொடியா, உன்னுடைய இடத்தில் வந்து இருக்கட்டும்” என்றார்கள். நண்பர் ஸ்ரீகாந்தாவும் அவர் மனைவியும் சுவாமிகள்கூட ஆடிவேலுக்குப் போகவில்லை என்பதைக் கண்டு, ஒன்றும் புரியாமல் நின்றார்கள். சுவாமிகள் அவர்களைப் பார்த்து “ஏன் மகனே! நீ ஆடிவேலுக்குப் போகவில்லையா?” என்று கேட்டார்கள். நண்பர் ஸ்ரீகாந்தா கண்ணீர் ஆறாகப் பெருக, வாய்குழறி அரசு ஆணை காரணமாகத் தாம் யாழ்ப்பாணத்தில் தங்க நேரிட்டது என்று சொல்லி அழுதார்கள்.

உடனே சுவாமிகள் பின்வருமாறு கூறினார்கள்: “கவலைவேண்டாம் மகனே, நமக்கென்ன வாகனமா இருக்கிறது? அந்த மடையனுக்குத்தான் மயில் வாகனம் இருக்கிறது. வேண்டுமானால் அவன்தான் நம்மிடம் வரவேண்டும். நாமெங்கே போவது?’ என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே பாட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு மணி நேரம் இங்கே தங்கியபிறகு சுவாமிகளிடம் விடை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினோம். வரும்பொழுது நண்பர் ஸ்ரீகாந்தா சொல்லியது இன்னும் என் கவனத்தில் உள்ளது. “அ.ச. ஐயா! பல ஆண்டுகளாகத் தவறாமல் ஆடிவேலுக்குக் கதிர்காமம் செல்லுகின்ற நான் இந்த ஆண்டு போகமுடியவில்லையே என்று வருந்தினேன். ஆனால், சுவாமிகளும் போகவில்லை என்பதை இப்போது கண்டுவிட்டோம். அவரைத் தரிசித்ததால் கதிர் காமத்தானைத் தரிசித்துவிட்டோம் என்ற எண்ணம் மனத்தில் நிறைந்துவிட்டது” என்றார்.