பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

தீவினைகள் என்பவை கொள்ளை, கொலை, கள்ளம் இவை மட்டும் அல்ல; உயிர்க் கொலையும் தீவினை தான். 'புலால் மறுத்தல்' நல்வினைகளுள் நயத்தக்கதாகும். இஃது அருளறத்தின் அடிப்படையாகும்.

கொலைத் தொழிலை விலைத் தொழிலாக மாற்றி உயிர்களை அலைத்துத் துன்புறுத்துவது கொடிது; இவற்றோடு வயலில் வலைவிரித்துப் பல்வகைப் பறவைகளைப் பிடித்து, அவற்றின் தோலை உரித்து, வதைத்து, உயிர்க் கொலை செய்து, 'சுவைக்கிறது' என்று தின்று மகிழ்கின்றனர். வானத்து வண்ணப்பறவைகள் அவற்றின் சிறகுகளை உடைத்து முடமாக்குகின்றனர். பறவைகளை வாட்டும் வேட்டுவனைச் சிறைப்பிடித்து விலங்கிட்டு இழுத்துச் சென்றால் அவன் இன்னல் எத்தகையதாக இருக்கும்? எண்ணிப் பார்க்கிறானா? வாயற்றவை; எடுத்து உரைக்கத் தெரியாது; நீ மானிடன் கத்திக் கதறிக் கொடுமை என்று புலம்புவாய்; சட்டம் உன்னை விடுவிக்கும். நீ மட்டும் உன் கொலைத் திட்டத்தை விட்டு விலகமாட்டாய். நியாயந்தானா? உன் செயலை நிறுவி அது தக்கது என்று தோற்றுவிப்பாய்.

கோழிப்பண்ணைகள்; அவை விற்பனைத் திண்ணைகள்; அவற்றுள் ஒன்றைப் பிடித்து அடித்துக் கொன்று தோல் வேறு, உடல் வேறு என்று பிரித்துப் பார்க்கின்றனர். அதன் அங்கம் தொழுநோயாளியைப் போல் காட்சி அளித்து அச்சுறுத்தவில்லையா? அடுத்த பிறவியில் சங்கு போல் வெளுத்துக் கைவிரல்கள் உளுத்து அவர்கள் தொழு நோயாளியாக மாட்டார்கள் என்றுஎப்படிக்கூற முடியும்? அறிவாளிகள் இந்தக் கொடுமையைச் சிந்தித்துப் பார்ப்பார்களா? உயிர்க் கொலை தீவினை; அதனைச்