பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

கற்றவன் திறமையாகச் செயல்படுகிறான். தொழில்களில் அவன் வெற்றி காண்கிறான்; இவன் தோல்வி பற்றுகிறான். எனவே சொத்து என்று மக்களுக்கு வைக்க நினைத்தால் கல்விச் செல்வமே உயர்ந்தது; நிலைத்தது அழியாதது; ஆக்கம் தருவது; ஏற்றம் உண்டாக்குவது.

பொருட்செல்வம் சேர்த்து வைத்தால் நேர்த்தியாகப் பிறர் கொள்ளை அடித்துக் குறைத்து விடுவர். ஒரே நாள் மலை மடு ஆகிவிடும்; பொன்னன் என்று பேசப்பட்டவன் நன்னன் ஆகி விடுவான். சிறு பொறி போதும்; அது மிகுந்தால் மலைபோன்ற குவிவுகளையும் அழித்துவிடும் நெருப்புக்கு எதுவும் முன் நிற்காது. அழிவுக்கு அரசன் தீதான்; கல்வியை அழல் ஒன்றும் தொடமுடியாது; கல்வி நிரந்தரமானது; ஊற்றுப் பெருக்கு அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.

இந்த அரிய கல்வி அதற்கு அளவு உண்டா? கரை இல்லை. கற்பவருக்கு நாள்கள் போதா, மெல்ல நினைத்துப் பார்த்தால் அதற்குள் நோய்கள் பல. அதனால் கண்டதைக் கற்றுப் பண்டிதன் ஆகலாம் என்ற நினைப்பை அகற்று. தேடிப்படி; நல்ல நூல்கள் உயர்வுக்கு மாடிப்படி: அன்னப்பறவை நீரும் பாலும் கலந்து வைத்தால் நீரை ஒதுக்கிப் பாலை மட்டும்தான் குடிக்கும். அதுபோல நல்ல நூல்களைத் தேர்ந்து எடு! குப்பைக் கூளம் அதனை நாடாதே, முத்துக் குவியலைத் தேடு; கத்தும் குயில் ஒசை இனிது; சத்தம் செய்யும் திரை இசைப் பாட்டு எல்லாம் கேட்டு உன் ரசனையைப் பாழ்படுத்திக் கொள்ளாதே, சுவை, ஒளி, ஒசை, ஊறு, நாற்றம் இதன் வகை தெரிந்து அறிவு பெறுபவன் உலகில் உயர்வான். கலைமகள் அவள் என்றும் கற்றுக் கொண்டே இருக்கிறாள்! கேட்டால் என்ன கூறுகிறாள்? "கற்றது கை மண்ணளவு. கல்லாதது