பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / காலத்துக்கு வணக்கம் ★ 91



சர்மா பதறிப்போய் ‘பெண்ணைக் காணோம்’ என்று போலீசுக்கு ரிப்போர்ட் செய்தார். ‘ரங்கநாதன் கோஷ்டி ஊர் எல்லையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர் என்ற செய்தியும் போலீஸாருக்குத் தெரிந்தது. இரண்டையும் சம்பந்தப்படுத்தி யோசித்த போலீஸார் சர்மாவை அழைத்து ‘உம்முடைய பெண்ணுக்கும் ரங்கநாதனுக்கும் தொடர்பு உண்டா?’ என்று விசாரித்தனர். சர்மா ‘காலேஜில் படிக்கும்போது பழக்கம் உண்டு’ என்று கூறவே காத்தியாயினி ரங்கநாதன் கோஷ்டியோடு சென்றிருக்க வேண்டும் என்று அனுமானித்தனர்.

இதன் பிறகு ஆறு மாதங்கள் போலீஸாருக்கு ஒரு தகவலும் தெரியவில்லை. பெண், போய்விட்டாளே என்ற ஏக்கத்தினால் நாகராஜசர்மா மனமுடைந்து உயிரைவிட்டார்.

ஜுன்-ஜூலை

ஜூன் மாதம் மூன்றாந்தேதி தூத்துக்குடியில் சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சப் போவதாகத் துண்டுப் பிரசுரங்கள் இரகசியமாக விநியோகிக்கப்பட்டிருந்தன. தகவல் எனக்கு எட்டிவிட்டது.

இரண்டாந்தேதி சாயங்காலமே பாளையங்கோட்டை சென்று சர்க்கிளிடம் கூறினேன்.'மப்டி'யில் நாலைந்து போலீஸ்காரர்களுடன் என்னையே தூத்துக்குடிக்கு அனுப்பினார்.

துரத்துக்குடிக்கும் மணப்பாட்டுக்கும் நடுவே ஜனநடமாட்டம் அதிகமில்லாத ஒரு பகுதியில் உப்புக் காய்ச்ச ஏற்பாடாகியிருந்தது. நானும் போலீஸ்காரர்களும் அந்த இடத்துக்குப் போனபோது உடைந்த பானைகளும் இடிந்த அடுப்புகளும்தான் எங்களை வரவேற்றன.

விசாரித்ததில் இரண்டாந்தேதி சாயங்காலமே யாரோ பத்துப் பன்னிரண்டு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்ணும் வந்து உப்புக் காய்ச்சிவிட்டுப் போய்விட்டதாக அக்கம் பக்கத்துக் கிராமத்தார்கள் கூறினர்.

மேலும் புலன் விசாரித்ததில், திருநெல்வேலியிலிருந்து தப்பி ஓடிய மறுமாதமே காத்தியாயினியும் ரங்கநாதனும் பாபநாசம் சிவன்கோவிலில் கலியாணம் செய்து கொண்டார்கள். அவர்கள் தம்பதிகளாகி ஒன்றே கால் வருஷத்துக்கு மேல் ஆகப் போகிறது.ரங்கநாதன் கோஷ்டியார் பொதிகைமலையில் பாணதீர்த்தத்துக்கு அருகில் ஒரு ஆசிரமம் மாதிரி அமைத்துக் கொண்டு அங்கே அஞ்ஞாத வாசம் செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி மாறுவேடங்களில் ஊருக்குள் வந்து தேசியப் போராட்டங்களுக்கும் பிரசங்கங்களுக்கும் தூண்டுகிறார்கள். தூத்துக்குடியில் உப்புக் காய்ச்சிவிட்டுப் போனது அவர்கள்தான் என்று தெரியவந்தது.

அதோடு, இரண்டு மூன்று மாசமாகக் காத்தியாயினி ஆசிரமத்தை விட்டு வெளியேறுவது இல்லையென்றும் அவள் வயிறும் பிள்ளையுமாக நிறைமாதமாக இருக்கிறாள் என்றும் கூடத் தெரியவந்தன.

போராட்டத்துக்கும் அஞ்ஞாத வாசத்துக்கும் இடையே தாம்பத்திய உறவும் வளர்ந்து கனிந்திருப்பதை எண்ணும் போது எனக்கு வியப்பாக இருந்தது.