கலைஞரின் சட்டமன்ற உரைகள்
503
செய்யும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், தென்னை சார்ந்த உபதொழில்களை ஊக்குவிக்கவும், 12.3 .2000 அன்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் என்னிடம் வைக்கப்பட்ட கோரிக்கையையொட்டியும் தமிழ்நாடு தென்னை மேம்பாட்டுக் குழுமம் (Tamil Nadu Coco- nut Development Authority) உருவாக்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)
மகளிர் நடத்தும் 210 நியாய விலைக் கடைகள் சிறப்பாக நடைபெற்றுவருவதைக் கருத்தில்கொண்டு அந்த எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நிதிநிலை அறிக்கையிலே நான் அறிவித்துள்ளேன். அத்துடன், மாவட்டங்களிலே உள்ள பெண்களின் சுய உதவிக் குழுக்கள் 500 அட்டைகளுக்குக் குறையாமல் சேர்த்து, நியாய விலைக் கடைகள் அமைத்து நடத்துவதற்கு முன்வந்தால் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அனுமதி வழங்கவும், ஊராட்சித் தலைவர்கள் 500 அட்டைகளுக்குக் குறையாமல் நியாய விலைக் கடைகளை அமைத்து மகளிரையே நியமனம் செய்து நடத்த முன்வந்தால் ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி) இதுபோலவே நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களும் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களும், நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களும் நியாய விலைக் கடைகளை நடத்த முன்வந்தால் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.
வணிகர்கள் கொடுக்கும் புகார்களை உடனடியாகக் கவனித்து விசாரணை செய்து, பாதுகாப்பும் நியாயமும் வழங்கிட இப்போது நடைமுறையிலே உள்ள காவல் துறை அமைப்பில் காலதாமதம் ஏற்படுவதால் பல்வேறு பிரச்சினைகள் உருவாவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே, வணிகர்கள் தரும் புகார்களை உடனடியாக விசாரித்து நியாயம் வழங்குவதற்கு ஏதுவாக ஒவ்வொரு மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் (S.P. Office) தனிப் பிரிவு ஒன்றை (Police Special Branch for Traders) அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி)