410 நினைவு அலைகள்
மீண்டும் படித்தேன், வேதனை கெளவிற்று; உடன் இருப்பவர் களுக்குக் காட்டிக் கொள்ளமுடியாத நிலை.
வேதனையை மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தவித்தேன்.
உணவு வேளை, எல்லோருடனும் மேசையண்டை அமர்ந்தேன். உண்ணவே முடியவில்லை. அதை நண்பர்கள் கவனித்து விட்டார்கள்.
என்ன கவலை என்று கண்டுபிடிக்க முயன்றார்கள்.
அலுவலக இரகசியத்தைச் சொல்லாமல், மூன்று நாள் கழிப்பதற்குள் நான் பட்டபாட்டை, எப்படி விவரிப்பேன்?
பசியும் பறந்து, தூக்கமும் கெட்டு, எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டிருந்தேன்.
சின்னையா வழிகாட்டுகிறார்
பிறகு சென்னைக்குத் திரும்பி வந்து சேர்ந்தேன்.
அலுவலகம் போவதற்கு முன்பு, தியாகராயநகரில் குடியிருந்த என்பால் பேரன்பு கொண்டிருந்த, திரு டி.எம். சின்னையா பிள்ளையைக் கண்டேன்.
தனியே அவரோடு பேசினேன். நீண்ட நேரம் பேசினேன். என்ன பேசினேன்?
‘நாட்டுப்புற, தொடக்கப் பள்ளிச் சிறுவர் சிறுமியர், முழு நாள் படிப்பதற்குப் பதில் அரைநாள் படித்துவிட்டு மற்றப் பாதி நாள் தத்தம் குலத் தொழிலைச் செய்யப் போகவேண்டுமாம் பொது மக்களுக்குக் குலத்தொழிலும் ஒரளவு எழுத்தறிவும் பெறுவதே போதுமாம். இதை நோக்கமாகக் கொண்டு, அரைநாள் படிப்புத் திட்டமொன்றைத் தீட்டித்தாருங்கள் - இப்படி முதல் அமைச்சர் இராசாசி தம்மிடம் நேரில் கூறியதாக எங்கள் இயக்குநர் கூறுகிறார்.
‘'நான் தொடக்கக் கல்விக்குத் துணை இயக்குநர். ஆகையால், புதிய திட்டத்திற்கு வரைவு போட்டுத்தர என்னைக் கேட்டிருக்கிறார். நான்கு நாள்களாக நான் ஊண் உறக்கம் இன்றி அவதிப்படுகிறேன்.
‘பொது மக்களுக்குக், கேடான திட்டத்துக்கு நான் உடந்தையாக இருப்பதா, என்று குருதி கொதிக்கிறது.
‘இந்த யோசனைக்கு எதிராகக் குறிப்பு எழுதினால் கவனிக்கவா போகிறார்,