பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


மக்களை ஆயிரக்கணக்காக ஒரே சமயத்தில் கொள்ளை கொண்டு போவனவாக இருந்தன.

விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புக்களினால், அற்புதமான மருந்துகளினால் இத்தகைய கொள்ளை நோய்கள் தடுக்கப்பட்டன. மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். அதன் காரணமாக மக்கள் வாழ்கின்ற சராசரி வயது 50 ஆயிற்று. இப்பொழுது 60க்கு மேலாக சராசரி வாழும் வயது இருக்கிறது. என்று கணக்கெடுத்துக் கூறுகின்றார்கள். ஆகவே, வந்து வருத்துகின்ற முதுமையை வரவிடாமல் செய்கின்ற வலிமை, இன்னும் விஞ்ஞானத்திற்கே வரவில்லையே!

60 வயதிற்கு மேல் வாழ்கின்ற மக்கள், எண்ணிக்கையில் அதிகம் இருக்கின்றார்கள் என்ற அளவுக்கு வாழ்க்கையில் வயதுத்தரம் உயர்ந்திருக்கிறது. ஐஸ்லாந்தில் பெண்களுக்கு 79ஆண்டுகள்; ஆண்களுக்கு 72 ஆண்டுகள், பிரிட்டனில் பெண்களுக்கு 75 ஆண்டுகள். ஆண்களுக்கு 69 ஆண்டுகள் அது போல இந்தியாவில் 60 ஆண்டுகள் என்று சராசரி வயதைக் கணக்கிட்டிருக்கின்றார்கள்.

எனவே வயது நிறைய வேண்டும் என்பதை விருத்தி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், வயதான முதுமைக் காலத்தில் இளமையாக எப்படிவாழவேண்டும் என்பதை நாம் நினைத்தே பார்க்கவில்லை.

எதற்கும் முன்பாகவே திட்டமிட்டுத் தயார் செய்து, தேர்ந்த நிலையில் சந்திக்கத் தயாராக இருப்பவர்களே கவலை இல்லாமல் எந்தக் காரியத்தையும் தங்கு தடையின்றி செய்யமுடியும். வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டுத் தைரியத்துடன் ஆணவமாகப் பேசிக் கொண்டு, அலட்சியப்படுத்துகின்ற அறிவாளிகள்தாம். முதுமையில் மனதாலும் உடலாலும் முடமாகிப் போய், குடங் குடமாகக் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருக்கின்றார்கள்.