பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

25



அவர் வந்துவிட்டார் என்றால் ஆனந்தராஜுக்குக் கொண்டாட்டம். அந்த முதியவரைக் கேலி செய்தே களைத்துப் போய்விடுவார். அந்த ஊரிலே பெரிய பணக்காரரான அந்தக் கிழவர். கிழிந்த கந்தலான வேட்டியையும் துண்டையும் அணிந்து கொண்டிருந்தார். தண்ணீரைப் பல நாளாய்க் காணாத வேட்டி. எண்ணெய் காணாத தலைமுடி. சரியாக சாப்பிடுவாரோ என்னவோ என்பது போலத் தோற்றம். பார்த்தால் ‘ஐயோ பாவம்’ என்று பரிதாபப்படுவது போல ஆள் இருப்பார்.

சவரம் செய்தாயிற்று. கேலியும் முடிந்தாயிற்று. ‘இந்தப் பணத்தைக் கட்டிக்கொண்டு அழுகின்றீர்களே! நாம் வைத்ததுதான் பணம். அந்தப் பணத்திற்கு நாம் அடிமையாக ஆகிவிடக்கூடாது’ என்று பேசியவாறே கூலிக்குக் கையேந்தினார் ஆனந்தராஜ். வந்தவரின் மடி காலியாக இருந்தது.

மடியைப் பார்த்தார் முதியவர். அங்கே பணம் இல்லை, உடனே ஆனந்தராஜ் அட்டகாசமாகச் சிரிக்க ஆரம்பித்தார். உடனே அந்த முதியவர், ‘நீ வீடுவரை வந்து போயேன். அங்கே தருகிறேன்’ என்று கெஞ்சாக் குறையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார். ‘இப்படியும் ஒரு ஜென்மமா’ என்று தலையிலடித்தவாறு பின் தொடர்ந்தார்.

வீட்டில் உட்கார்ந்திருந்த ஆனந்தராஜ் நிமிர்ந்து பார்த்தார். ஒரு கையிலே எதையோ அள்ளி வந்து, அவரது துண்டை விரிக்கச் சொன்னார் முதியவர். ஆனந்தராஜ் துண்டை விரித்துக் காட்டினார். அதிலே வெள்ளி நாணயங்களை, வீழும் அருவி போலக் கொட்டினார்.