பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

61



அவனுக்கு கைகொடுப்பது போல (Shake Hands) பழக்கி வைத்திருந்தான். அது அவனுக்கு இன்பமாக இருந்தது.

குட்டி குட்டியாகவே இருந்துவிடுமா என்ன? அது வளர்ந்துகொண்டே வந்தது. சிங்கமாகவும் மாறிவிட்டிருந்தது. ஒருநாள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறான். பாசத்தோடு பழகிய சிங்கமும் பக்கத்தில் வந்து, வழக்கம் போல ‘கைகொடுக்கும்’ பாவனையில் தனது கையினைத் தூக்கிப் போடுகிறது.

தூக்கிய வேகத்தில், அவன் தேகத்தில் அதன் நகங்கள் பதிகின்றன. இரத்தம் கசியத் தொடங்குகிறது. மீண்டும் ஒருமுறை வைக்கும் பொழுது, இரத்தப் போக்கு. திடுக்கிட்டான் அவன். இரத்த வாடையைக் கொண்டு சிங்கத்தின் போக்கும் மாறிவிட்டிருந்தது.

மறுமுறை அதன் நகம் அவன் மேல் பட்டால் என்ன ஆகும்? தன் நிலையைப் புரிந்து கொண்டான். தலையணை அடியிலே வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு, சிங்கத்தைக் கொன்று, தன்னைக் காத்துக் கொண்டான். அதன் பின்னரே அவனுக்கு ‘ஞானம்’ வந்தது. என்னதான் பழகினாலும், சிங்கத்தின் குணம் மாறுமா என்பதுதான்.

அந்த இராணுவ வீரன்தான் நாம். நாம் கடைப்பிடிக்கின்ற தீய பழக்கவழக்கங்கள் (Habits) தான் சிங்கக் குட்டி. ஆரம்பக் காலத்தில் அழகு முகம் காட்டி, ஆனந்தச் சுவையை ஊட்டி, அதனுள்ளே ஆளை சிக்க வைத்து, அகப்பட்டவுடன் அவைகள் நம்மை அடிமையாக்கி விடுகின்றன.