பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

79


5. உணவும் குணமும்

அழகும் ஆண்மையும் மிக்க நமது உடல் ஓர் அற்புதமான படைப்பாகும். அதிசயமான அமைப்பும் ஆகும். சதாகாலமும் உள்ளுக்குள்ளே எரிந்து கொண்டிருக்கும். அதே நேரத்தில் எரிபிழம்பு தெரியாதவண்ணம் ஒளிருகின்ற ஒரு நூதனப் பெட்டகமாகவும் நமது உடல் துலங்குகிறது.

எரிந்து வெப்பத்தைக் கொடுத்துக் கொண்டு, உறுப்புக்களை இயக்கி வரும் உடலில், எடை குறைந்து கொண்டே வரும் என்பதால்தான், நமக்குப் பசி ஏற்படுகிறது. நாமும் அடிக்கடி உண்ணுகின்றோம்.

உணவுதான் ஜீரணமாகி, இரத்தமாகின்றது. இரத்தம்தான் எல்லா வகையிலும் உடலைக் காக்கிறது. ஆகவே உடலை ஒருவர் நையாண்டியுடன் குறிப்பிடுகிறார். ‘இது சோற்றாலடித்த சுவரு, கொஞ்சம் சோறில்லாட்டிப் போனாபோகுமே உசிரு.’ என்பதாக, உணவுதான் உடலின் ஜீவநாடி, ஆதாரம் அனைத்தும் என்று கூறலாம்.

‘ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா’ என்று பாடுகிற பாட்டையும் நீங்கள் கேட்டிருக்கலாம். அத்தகைய அற்புதக் களஞ்சியமாகத் திகழும் உடலின் ஆதாரமாக அமையும் உணவை நாம் ஏன் உட்கொள்கின்றோம்? அதனால் என்னென்ன பயன்கள் ஏற்படுகின்றன என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்வோம்.