பக்கம்:நூறாசிரியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

நூறாசிரியம்

அவ் வாங்கு ஆற்றல் கருவும் திருவும் எய்தி மெய்யறிவென்னும் பயிராக வளர்ந்து பெருகுதற்குக் கல்வி என்னும் நீர் பாய்ச்சப் பெறுதல் வேண்டும் என்பது வலியுறுத்தப் பெற்றது.

இனி, உழுதலும், நீரிடுதலும் ஆகிய பின்னைக் காப்பும் தேவையாகலின், ஒழுகு, நாண், நட்பு, உரன் ஆய இவை நான்குபுறமும் சூழப்பெறும் காப்பீடாகக் குறிக்கப் பெற்றன.

மெய்யறிவு வேணாண்மைக்கு ஒப்புரவாண்மை, அன்புடைமை, அறமுடைமை, நடுவுநிலைமை, பொச்சாவாமை, புறங்கூறாமை, பொய்யாமை, முதலிய கூறுபாடுகளின் கடைப்பிடிப்பாகிய ஒழுங்கும், அறிவு, மனம், சொல், வினை முதலியவற்றின்கண் சேரும் குற்றங்களுக்கும் அவை மேல்வரும் பழி கரிசுகட்கும் உயிர் நடுங்குதலாகிய நாணமும், அன்பு, அறிவு, இன்பு, பண்பு ஆகியவற்றிற் பொருந்தியாரது நட்பும், துன்பிற்றுவளாமை, இன்பிற் கெதிரேறல் சூழ்விற் கொளிந்துய்தல், பகைவர் உளம் வேறல் முதலியவற்றிற்காய மனவுரனும் நான்கு புறத்தும் அமைக்கப் பெறும் வேலிகளாம் என்க.

ஐய! - என்று விளித்தது தலைவனாகிய இறைவனை.

நீ பயந்த வாணாள் தாயம்: நீ அருளிய வாழ் நாள் என்னும் உரிமைக் காலம் பயந்தது-பயத்தது-பயன் பெறத் தந்தது.

உயிர்கள் பயன் பெறும்படி தந்த உரிமைக் காலமாகிய இவ் வாழ்நாளில் செய்ய வேண்டுவன யாவை என்பனவற்றைக் குறித்ததாம் இப்பாட்டு.

தாயம்-உரிமை. இது தாய் வழியாக முதன் முதல் பெறப்பட்டதாகலின் இப்பெயர் பெற்றது. உலகின் மாந்த நாகரிகத்தின் முந்தைய உரிமை தாயுரிமையே ஆகலானும், தமிழர் மாந்த இனத்தின் தொடக்க நாகரிகத்தார் ஆகலானும், 'தாயம்' முதலிய தாய் முதல் குறித்த சொற்கள் தமிழ் மொழிக்கு நிறைந்த வழக்காதல் காண்க

தாயம் உரிமை உரிமையுள்ள நிலம்-உரிமை பெற்ற நாடு-உரிமை பெறு சுற்றம்-முன்னைய வைப்பு-உரிமையால் பெறும் மேலாண்மை-பொருள் பயன்-ஈகம் ஈகை, அடைக்கலம் முதலிய சொற் பொருட்களையும், தாயதி, தாயத்தார், தாயேடு, தாயோலை, (மூல ஏடு), தாய்க்கால், தாய்க்கட்டு, தாய்க்கண், தாய்க்காணி, தாய்க்கிழங்கு, தாய்க்கழகம், தாய்ச்சீட்டு, தாய்ச்சீலை (கோவணம்), தாய்ச்சுவர், தாய்ப்பாளை, தாய்முதல், தாய்வழி, தாய்வேர் முதலிய தலைமைப் பொருள் கொண்ட எண்ணிறந்த சொற்களையும் ஓர்ந்துணர்க.

தந்தை பெயரை முன்னடையாப் பெற்றுத் தலைமைப் பொருளும் உரிமைப் பொருளும் தரும் சொற்கள் தமிழில் இல்லாமையே, தமிழின் முன்மையையும் பிற மொழிகளின் பின்மையையும் தெளிவாகக் காட்டுவனவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/104&oldid=1221523" இலிருந்து மீள்விக்கப்பட்டது