பக்கம்:நூறாசிரியம்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

93


கொள்ளாது நாம் கடைப்பிடித்த உறுதிப்பாட்டையும் அவனொடு பழகிய களவுக் காலத்தே கைவிட்டுக் காதலை வேண்டி அவன் இருப்பிடம் சென்ற வகையில் நம் அறியாமை போன்ற அடக்கத்தைக் கை ஞெகிழ விட்ட பிழை இரண்டாகும். அவனைக் காணுதற்குக் காந்துதலோடு அவாவியும், கண்டபின் நம் கைகளைத் தொட்ட அளவிலேயே அவற்றை அவன்பால் தந்தும், மீட்டுக் கொள்ளல் இன்றி அவன் நம்மை அனைத்த விடத்து அவனுள் அடங்கியும், நம்மை மணந்து நில்லாத ஒருவனுக்காக வேட்கை மிகுதியால் வெட்கத்தை உகுத்துவிட்ட பிழை மூன்றாம். தோன்றிய அரும்புபோலும் வெள்ளிய பற்கள் என்றும், பவழம் போலும் சிவந்த வாயென்றும்,கனி போலும் குழைவுற்ற இதழ்கள் என்றும், கிளர்ச்சியுற்ற முலைகளென்றும், மெல்லியதாய் அசையும் இடையென்றும், பருத்த தொடை யென்றும் அவன் மருவல் நோய் முற்றி மெல்லெனக் கூறிய பொழுதும் அவன் மொழியான் இன்புற மயங்கி உடற் கியல்பாகிய கூசுதலுணர்வை ஒடுக்கிக் கொண்ட பிழை நான்காம் என்றிந் நான்கு வழியிலும் பெறற்கரிய தாகிய நம் பெண்மைச் செவ்வியை அவன் நுகர்ந்து பொலிவழிக்கும்படி அவனிடம் நாமே வலியத் தந்து, இப்பிந்திய பொழுதில் தனித்து வருந்துதல், கொடுமை முற்றிய பெருத்த நகைப்பை எமக்குத் தோற்றுவிக்குமாக.

விரிப்பு:

இப்பாடல் அகத் துறையைச் சார்ந்தது.

தலைவனொடு மணவாது ஒழுகிய தலைவி ஊரார் உரைத்த கெளவை மொழிக் காற்றாது வருந்த, தோழி தலைவியின் வருத்தத்திற்கு அவள் அறியாமையே கரணியமென்று உலகியல் அறங்கூறிப் புறத்தே நிற்கும். தலைவன் செவிப்பட இடித்துக் கூறியதாகும் இப்பாட்டு. அவள் பேதைமையால் ஆற்றிய வரையா வொழுக்கம், “வெம்முது பெருநகை விளைக்குமாறு" ஈண்டுப் படர்ந்தது என்பது தோழியின் கருத்து பெருநகை எள்ளற் பொருட்டு விளைந்ததென்க.

தலைவியின் இற்றை வருத்தத்திற்கு நான்கு பிழைகள் பொருட்டுகளாயின. அவை: ஊரார் கூறும் அலர் மொழிகளுக்கும் மழைக்கும் இருளுக்கும் அஞ்சாது அவனொடு கூடுதல் வேண்டிக் குறித்தவிடம் நோக்கிச் சென்றது;

தன் போலும் பருவப்பெண்டிர் உலகியல் அளவில் ஈடுபடும் முறைமை குறித்து அறவோர் கூறிய அறிவுரைகளை எண்ணாது, தானே அறிந்தாள் போல் செருக்குற நடத்தல் வழித் தனக்காய அடக்கத்தை விட்டது;

பருவ உணர்வால் தன்னை மணந்து கொள்ளாத ஒருவன் தன்னைத் தீண்டுதற்கிடமளித்துத் தனக்கியல்பாகிய நாணத்தைக் கைவிட்டது;