பக்கம்:நூறாசிரியம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

159


வலிமை. தமிழ் கொல் தில்லி -என்றமையின் அக்கொல்வதாந் தன்மை தொடர்வதாம் நிலை உணர்த்தப்பெற்றது.

இமிழ்கடல் - வையத்து . . . திறலே - அண்ணாத்துரையின் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த மறு ஆண்டான தி.பி.1999(கி.பி. 1958). இன் தொடக்கத்திலேயே உலகத் தமிழ் விழாவை உலகமெலாந் தழுவிய அளவில் தமிழ்நாட்டின் தலை நகராகிய சென்னையம்பதியில் சிறப்புறக் கொண்டாடியது. இவ்விழா சனவரி 3 ஆம் பக்கலிலிருந்து 11ஆம் பக்கல் வரை கொண்டாடப்பெற்றது. இவ்விழாவில் தமிழகத்தினின்றும், பல வெளிநாடுகளிலிருந்தும் ஏறத்தாழப் பத்திலக்கம் மக்கள் வந்து கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு ஏறத்தாழ ஓரிலக்கம் உருபா செலவிடப் பெற்றது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நடந்த அறிஞர் கருத்தரங்கில் நூற்று ஐம்பத்து மூன்று கட்டுரைகள் படிக்கப்பெற்றன. அவை, ஏறத்தாழ இருபத்தேழு நாடுகளிலிருந்து வந்த பேரறிஞர்களால் படிக்கப் பெற்றவை யாகும். இவ்விழாவின் பொழுதுதான் சென்னைக் கடற்கரையில் திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், ஒளவையார் முதலிய முற்கால பிற்காலச் செந்தமிழ்ப் புலவர்களின் பதினொரு படிமங்கள் நிறுவப்பெற்றன. இவ்வளவு சிறப்புறும்படி மொழிக்கென எடுத்த வேறு ஒரு விழா உலகிலேயே இல்லை. இதன் வழி அண்ணாத்துரை அவர்களின் அரசு தமிழின் பெருமையை உலகெல்லாம் பறைசாற்றியது. வடவரின் தில்லி யாட்சியதிகாரத்தின் கீழும், வடமொழியாளரின் சூழ்ச்சிகளுக்கிடையிலும் இத்தகைய ஒரு விழா வெடுத்தது மிகத் துணிவான செயலாகும். அத்துணிவு அண்ணாத்துரையினுடையதே என்று இவ் வரிகளில் பாராட்டப் பெற்றது என்க, திறன் - வலிமை, துணிவு.

மடம்படு கொள்கை - மடமை நிறைந்த மூடக் கொள்கைகள். மக்களை நால்வேறு பிரிவினராக்கி அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வைக் கற்பித்ததும், மெய்ப்பொருள் கொள்கைக்கு மாறாக, அவற்றிற்குக் காவலாகச் சிறுதெய்வங்களைக் கற்பித்ததும், அவை தழுவிய ஆரவாரத் திருவிழாக்களை எடுப்பித்ததும், மக்களை மேலும் மேலும் மடமையில் ஆழ்த்தும் பகுத்தறிவுக் கொவ்வாத கருத்துகளைப் பரப்புவதும் மடம்படு கொள்கையாம். இவற்றைப் பெரும்பாலும் ஆரியர்கள் தமிழர்களின் மேம்பாட்டைச் சீரழிப்பதற்காகப் பயன்படுத்தினர். அவற்றை அண்ணாத்துரையவர்கள் மிகுவாகக் கடிந்து தடுத்து நிறுத்தினார்.

மறித்து உயிர்ப்பு அடக்கி - அவற்றைத் தடுத்து நிறுத்தி அவை மேலும் மேலும் கிளராவண்ணம் அவற்றின் மூலக்கரணியங்களை எடுத்து விளக்கி, அவற்றின் பொய்மையை நிலைநாட்டி அவற்றின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை யிட்டார். உயிர்ப்பு அடக்குதல் - உயிரற்றுப் போகும்படி செய்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/185&oldid=1220682" இலிருந்து மீள்விக்கப்பட்டது