பக்கம்:நூறாசிரியம்.pdf/277

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

251


ஆற்றிலம் - ஆற்றி இலம் என்னும் சொற்கள் புணர்ச்சியில் இடைக் குறைந்து நின்றன. ஆற்றுதல் நன்றாற்றுதல் - நல்லது செய்தல்.

அழுங்கினர்- வருந்தினர், நெஞ்சுள் வருந்துதல்.

சான்றோர் - சான்றாகி நிற்பவர். பிறர்க்கு எடுத்துக்காட்டாகி நிற்கும் பெருந்தகையாளர்.

நோற்றிலம்-நோற்று இலம்-நோன்பு செய்திலம் முதியோர் நொந்தனர் என்றிருத்தலின், முதுமையில் கடந்த காலத்திற்கு வருந்துதல் என்க.

பெற்றிலம்- பெற்று இலம் பெற்றிருத்தல் இல்லேம். பெறற்குக் காரணமாயினர் அவராகவின் ஆடவர் புலம்பினர் ஆயினர்.

தாயர் ஆகிலம் தாயர்: வெறுமனே தாயர் ஆகிலம் எனின், தாய்ப்பேறே வாயாதவர் என்றாகுமாகலின், அஃதில்லாமை குறிக்கத் தாயர் என்று தம் பேறு குறித்தனர் என்க.

உடப் பிறந்திலம் - உடன் பிறந்திலம் என்பன வலித்துப் புணர்ந்தன

படற்கிலம் நோக்கு - நோக்கில் படுதற்கு இலம்.

கலங்குதல் - மனமும் கண்ணும் ஒருசேரக் கலங்கி வருந்துதல்.

உழையோர் - பாங்குளார். நண்பர்.

பிந்தினம்-பிதற்றினர்' பிந்தினோம் அல்லம் எனல் நிகழ்ச்சி நடந்த பின்னைக் கூறுதலாகலின் பிதற்றுதல் ஆனது.

முதிராச் சிறுமொழி - வளர்ச்சியுறாத சிறிய பயன்தரும் இந்தி மொழி.

முனிந்து- அதன் புகுதலைக் கடிந்து வெறுத்து.

முத்தமிழ்க்கு அதிர் எரி எஃகம் அணிமுன் நின்று - முத்தமிழ் காத்தலின் பொருட்டு, அதிர்கின்ற ஒலியுடன் எரியுமிழ்கின்ற வேட்டுக் குழல் தாங்கிய அணியினர் முன்னே துணிந்து நின்று.

மறல் கொடு நெஞ்சின் மாமகன் - வீரம் கொண்ட நெஞ்சுடைய பெருமை மிக்கவன்.

விறல்பெறத் தாங்கி - வெற்றி பெறும்படி நெஞ்சில் ஏற்று.

வீழ்ந்த ஞான்று - உயிர் கழன்று விழுந்த பொழுது,

இப்பாடல், 1965இல் தமிழகத்தில் நடந்த இந்திமொழித் திணிப்பை எதிர்த்தெழுந்த போரில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அரசேந்திரன் என்னும் மாணவன் காவல் சூட்டைத் தாங்கி மடிந்தபொழுது, அவன் வீரப் பிறப்பைப் பலரும் பாராட்டியுரைத்ததைக் கேட்டுப் பாடியது.

இது, செந்தமிழ்த் தும்பை என் திணையும், மொழி மறம் என் துறையும் என்க. திணையும் துறையும் புதியன.