பக்கம்:நூறாசிரியம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
55 கல்லாப் புலைமொழி


அண்ணா மலைசெய் பல்கலைக் கழகத்து
உண்ணில் போக்கிய இளையோர் அண்மி
தெருவலம் வந்து சூளுரை முழக்கி
ஒள்ளிய கொள்கை சுவர்தொறும் வரைந்து
மைநிற நெடுங்கொடி பன்மனை தூக்கி 5
நெடுந்தொடர் வண்டித் தடம்படுத் திருந்து
கல்லாப் புலைமொழி கற்கெனத் தூண்டிய
ஒல்லாப் பேதையர் அரசு கடிந்து
காவல் மாடத்து ஏவல் பணிந்து
வல்சிறை போகி மெய்யடி பட்டு 10
நெருப்புரை யாற்றி உறுப்பறை போகிய
தடந்தோள் மாணவர்க் குள்ளுயிர் கீண்ட
தாழா நல்லிசைத் தமிழே
வாழிய நெடுநீர் வையநாள் வரையே!

பொழிப்பு :

அண்ணாமலையார் உருவாக்கிய பல்கலைக்கழகத்தின் (உணவு விடுதியிலிருந்து ஏற்பட்ட கலவரத்தின் பொருட்டாய்) வெளியேற்றப்பட்ட இளைஞர்கள் யாவரும் ஒன்று கூடித் தெருத் தெருவாய் ஊர்வலம் வந்தும், (இந்தியை நுழைய விடமாட்டோம் எனப் பலவாகிய) உறுதி உரைகளை முழக்கியும், தெளிவான அறிவு சான்ற கொள்கை மொழிகளை ஆங்காங்குள்ள சுவர்கள்தோறும் வரைந்தும், நீண்ட கறுப்பு நிறக் கொடிகளைப் பல வீடுகளில் ஏற்றி நிறுத்தியும், நெடிய் தொடர்வண்டித் தடங்களில் படுத்து, வண்டிகளைத் தடுத்தும், கல்விச் சிறப்பில்லாத புல்லிய மொழியாகிய இந்தியைக் கற்றுக் கொள்ளத் துண்டிய, அதைத் தடுத்து நிறுத்தவியலாத பேதைமை சான்றவரின் அரசமைப்பைக் கடிந்தும், காவல் நிலையங்களில் உள்ள காவலர்களின் கட்டளைப்படி பணிந்தும், சிறைப்பட்டும், உடல் வருந்த அடிபட்டும், நெருப்புப் போலும் கொதிப்பான உரைகளைக் கூறியும், உடல் உறுப்புகள் தாக்கப்பட்டதால் ஊறுபட்டும், நின்ற பருத்த தோள்களை உடைய மாணவர்களுக்கு, அத்தகைய வீர உணர்வு பெறுமாறு உள்ளுயிரைக் கிளர்ச்சியுறச் செய்த தாழ்ச்சியுறாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/282&oldid=1220226" இலிருந்து மீள்விக்கப்பட்டது