பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

நெருப்புத் தடயங்கள்

“எனக்கு தமிழ் கஷ்டமாய் இல்ல. அது சொல்றபடி எதுவுமே நடக்காததுதான் கஷ்டமாய் இருக்கு.”

“நீங்க என்ன சொல்றிங்க?”

“காலேஜில பட்டப்படிப்புப் படிக்கும்போது... தமிழ்ல சிலப்பதிகாரத்துல ஒரு பகுதி வந்துது. அதுல, ஆற்று மணலுல, ஒரு ஆடவன் உருவத்தை உருவாக்கும் ஒரு சிறுமிகிட்ட, அதுதான் ஒன் காதலன்னு பேசிடுறாங்க. உடனே அந்த அறியாச் சிறுமி, அதை நம்பி, காதலனை ஆற்றுவெள்ளம் அடிச்சிட்டுப் போயிடப்படாதுன்னு காவல் காத்தாளாம்.”

“ஆமா, நானும் படிச்சேன். இது கண்ணகி, பாண்டிய மன்னன் கிட்ட சொல்றது தானே?”

“ஆமாம், இதை நான் அற்புதமாய் நினைச்சு. எம்.ஏ. வுல தமிழை எடுத்தேன். ஆனல் இப்போதான் புரியுது, அற்புதமுன்னு நினைக்கிறதுக்கு நம்மோட அபத்தமான மனசுதான் காரணம். கலாவதி, இந்தக் கிணறு பிரயோஜனமில்ல. நாம அந்தக் கிணத்துல போய் குளிக்கலாம். உம், சோப்பு டப்பாவை எடு.”

எதிர்பாராத பேச்சைக் கேட்டு, சற்றே திகைத்த கலாவதியின் தோளைப் பிடித்துக் கொண்டு, கீழே குனிந்து சோப்பு டப்பாவை எடுத்துக் கொண்டு, தமிழரசி கலாவதியை, ரதத்தை இழுப்பதுபோல் இழுத்தாள். தாமோதரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளே நோக்கி, அவனையறியாமலே, அவன் கால்களும் இயங்கத் துவங்கின. உடனே ஒரு காலால், இன்னொரு காலுக்கு அணை போட்ட படியே, அவன் கேட்டான்:

“இங்கேயே நீங்க குளிக்கலாம். நான் கிணத்துக்குள்ளே இறங்கிக் குளிக்கிறேன்.”

“கலா, ஒன்னத்தாண்டி! நீ கூட மரக்கட்டையாய் போயிட்டியா? புறப்படு.”